சனி, 4 ஜூலை, 2020

நீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .

சாவித்திரி கண்ணன் : இனி சி.பி.ஐ விசாரணையைக் கோர முடியாத
அளவுக்கு நேர்மையாகவும், வேகமாகவும் சாத்தான்குள கொலை வழக்கை கொண்டு சென்று கொண்டிருக்கிறது நீதிமன்றம்!
கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளது ஆகப் பெரும் மகிழ்ச்சியை தருகிறது(ஆனால், இவர்களைவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.)
இந்தப்படியே வழக்கை அதன் போக்கில் அனுமதிப்பது அதிமுக அரசுக்கு நல்லது. நீதிமன்றம் இதில் காட்டிவரும் அதீத அக்கறை மக்களுக்கு பெரிய ஆறுதலையும், நிம்மதியையும் தந்துள்ளது.சி.பி.சி.ஐ.டி விசாரணையை அதிரடியாக பாதியில் நிறுத்தி,இவ் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க முயன்றால்,அதிமுக அரசு மக்களின் அதிருப்தியை மட்டுமல்ல,பெரும் அவமானத்தையும் சந்திக்க நேரும்.
ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் போலீசை பாதுகாக்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற தோற்றம் முதலமைச்சர் எடப்பாடியின் பேச்சால் உருவாகிவிட்டது.முதலமைச்சரே நமக்கு ஆதரவு என்ற தைரியத்தில் தான் மாஜிஸ்டிரேட் பாரதிதாசனிடம் காவலர்கள் மிக மோசமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.ஆனால்,இந்த வழக்கில் இனி முதலமைச்சர் குற்றவாளிக் காவலர்களை காப்பாற்ற முயற்சித்தால்,அது முதலுக்கே மோசமாகி,ஆட்சிக்கே ஆப்பாகிவிடும்!

காவலர் அந்தஸ்த்தில் உள்ள கொலைகாரக் குற்றவாளிகளைக் கூட தண்டிக்க திரானியற்ற கையாகாலாத அரசு மீது குறைந்தபட்ச நம்பிக்கைக்கு கூட வழியில்லை.
அநீதியான ’லாக்அப் மரணம்’ என்று நன்கு தெரிந்த நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க்கப்படும் என்பதை உத்திரவாதப்படுத்தாமல் நிதியை வழங்குவதன் மூலம் முதல்வர் என்ன சொல்ல வருகிறார்? இன்னும் வெளிப்படையாக’’காவல் நிலையங்களில் தங்கள் உயிரை பலி கொடுக்கும் குடும்பத்திற்கு அரசாங்கம் இருபது லட்சம் பரிசு தரும்’’ என்று சொல்லி இருக்கலாமே!
முதலமைச்சரான எடப்பாடி இப்படியாக தன் இமேஜை முற்றிலும் ‘டேமேஜ்’ செய்து கொள்ள, மறுபுறம் ஒரு சாதாரண காவலரான ரேவதி அஞ்சாமல் மனசாட்சிக்கு பயந்து உண்மை சொல்லியதன் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். இதன் மூலம் மரியாதை என்பது வகிக்கும் பதவியினால் வருவதல்ல, எண்ணும் எண்ணத்தாலும், நடத்தையாலும் ஏற்படுகிறது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்!
’’காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி வழங்குவது என்னாச்சு..?’’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது! இதையே சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
’காவலர்களுக்கு யாரால்,எதனால் மன அழுத்தங்கள் உருவாகின்றது’ என்ற மூலத்தை அறிந்து, அதைக் கலையாமல் அவர்களுக்கு பயிற்சி வழங்குவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது…?
‘’கூவத்தை சுத்தம் செய்கிறேன்’’,’’கங்கையை சுத்தம் செய்கிறேன்’’ என்று கோடிக் கோடியாய் செலவழித்ததை போலத் தான் காவலர்களுக்கு பயிற்சி கொடுத்ததாக பல நூறு கோடி செலவு கணக்கு எழுதத் தான் இது பயன்படும்!
மனித நேயம், மரியாதையோடு பழகும் பண்பாடு போன்றவற்றை போதனையால் உருவாக்கமுடியாது. நடைமுறை உதாரணங்களாக உயர்பதவியில் இருப்பவர்கள் திகழ்ந்தாலே போதுமானதாகாதா?
கழிவுகளை கொட்டாவிட்டால் ஆறும், நதியும் தூய்மையாகிவிடப் போகிறது! அதே போல காவல்துறை மேலதிகாரிகள், காவலர்களை அடிமைகளாக நடத்தாமல் மனுசனாக முதலில் மதிக்க வேண்டும். எல்லா வேலைகளில் இருப்பவர்களையும் போல வரையறுக்கப்பட்ட வேலை நேரம்,வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு ஆகியவற்றை காவலர்களுக்கு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இதை தரமறுக்கும் அதிகார மனோபாவத்திற்குத் தான் பயிற்சியும் கவுன்சிலிங்கும் தேவை! தானே மனிதனாக மதிக்கப்படாத நிலையில் இருக்கும் ஒருவனிடம் நீ மற்றவர்களை மனிதனாக மதிக்க வேண்டும் என்று உபதேசித்து என்ன பயன்? அவர்களுக்கு முன் உதாரணமாக மேலிருப்பவர்கள் இருந்து காட்ட வேண்டாமா?
அவர்கள் அறிந்ததெல்லாம் ’அதிகாரம்’ என்ற ஒற்றைச் சொல்லின் அர்த்தம் தான்! ’அது அடிபணிவது,அடிபணிய வைப்பது’ என்ற புரிதல் மட்டுமே! அதனால், அதைத் தான் காவலர்கள் மக்களிடம் வெளிப்படுத்துகிறார்கள்!
ஊருக்கு உபதேசம் செய்யும் மேலதிகாரிகளில் பலர் காவலர்களை மக்கள் பணியாற்றவிடாமல்,தங்கள் வீட்டில் ஆர்டர்லிகளாக வேலை வாங்குபவர்கள் தான்.அந்த ஆர்டலிகளுக்கு நோகாமல் பிரமோசன் மற்றும் சலுகைகள் கிடைக்க வழி செய்கிறார்கள்!
நம்ம நாட்டில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொருவருமே தங்களுக்கு மற்றவர்கள் கேள்வியில்லாமல் அடிபணிய வேண்டும் என்று நினைப்பது தான்!
நீதிபதிகளில் பலர் தங்களை கடவுளின் அவதாரம் போல நினைக்கிறார்கள்!முதலமைச்சர் தொடங்கி தாசில்தார் வரை ஒவ்வொரும் தன் அளவுக்கு அதிகாரத்தை ருசிபார்க்கத் துடிக்கிறார்களேயன்றி, மக்களுக்கு கடமைகளைச் செய்யக் கிடைத்த வாய்ப்பாகப் பார்ப்பதில்லை!
உச்சத்தில் இருப்பவர்களின் அதிகாரமமதை ஓங்க,ஓங்க அது அடித்தளத்தில் பல அநீதிகள் பிறப்பெடுக்க வழிவகுக்கும்!
அதிகாரத்தைப் போல ஆபாசமானது வேறில்லை!
அதிகாரத்தைப் போல ஆபத்தானதும் வேறில்லை!
அந்த அதிகாரபோதை தான் ஆணவத்தை தருகிறது!
அந்த ஆணவம் தான் பல அநீதிகளுக்கு வித்திடுகிறது!
இந்த தெளிவை அதிகாரத்தின் அனைத்து அடுக்கு நிலைகளில் இருப்பவர்களுக்கும் கொண்டு சேர்த்தாலே போதுமானது!
’’யார் தவறு செய்தாலும் அதற்கான விளைவுகளில் இருந்து விடுபடவே வழியில்லை,அதற்கான தண்டனைகளிலும் மாற்றமில்லை’’ என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே உண்மையான மக்களாட்சிக்கு அர்த்தமாகும்!
ஆனால்,அப்படியான மக்களாட்சி சாத்தியப்படாத நம் நாட்டிலே அவ்வப்போது அபூர்வமாக நீதிமன்றங்கள் தான் கடைசிப் புகழிடமாக விளங்குகின்றன!
ஒரு பதிவை போடுவதற்குள் எவ்வளவு மாற்றங்கள்...! இந்த வழக்கை நேர்மையான திசை நோக்கி நம்பிக்கையாக கொண்டு சென்ற நீதிபதி பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் கண் கொத்தி பாம்பாக பார்க்கும் ஒரு வழக்கில் கொஞ்சமும் கூச்சமின்றி,அதிரடியாக நீதித்துறை செயல்பாட்டை நிர்மூலமாக்கும் முயற்சியாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் பின்னணி அம்பலமாகும் போது ஆட்சியாளர்கள் மிக மோசமாக அவமானப்பட நேரிடும்!
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.

கருத்துகள் இல்லை: