செவ்வாய், 30 ஜூன், 2020

எளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..

சாவித்திரி கண்ணன் : ’’நீங்க இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா? ஹரி நாடார்னு ஒரு ஆளு சாத்தான்குளச் சம்பவத்திற்கு அந்த போலீசாரைப் பழிக்குப் பழிவாங்குவேன்னு சொல்வதை ஒருத்தரும் கண்டிக்கலையே!’’ ’’ஆளாளுக்கு போலீசை திட்டித் தீர்க்காறாங்க! நடந்தது பெரிய தவறு தான்! அதற்காக போலீஸ் வீடுகளுக்கு பால் தரமாட்டோம்,தனிமைப் படுத்துவோம்னு சொல்றது ரொம்ப கஷ்டமாயிருக்குது’’
என்னுடைய போலீஸ்துறை நண்பர்கள் இருவரிடம் பேசிய போது வெளிப்பட்டவையே இவை! உண்மையில் அவர்கள் இருவரையும் பொறுத்தவரை நேர்மையானவர்கள்! அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளமுடிந்தது. நம்மை பொதுமக்கள் புரிஞ்சிக்கிடலையே என்ற ஆதங்கமும், சமூகம் நம்மை தனிமைபடுத்துகிறதோ என்ற அச்சமும் பொதுவாகவே இன்று அனைத்து காவல்துறையினரிடமும் பரவலாக வெளிப்படுவதைப் பார்க்கிறேன்.

நியாயம் தான்! ஹரி நாடார் சொல்வது கண்டிக்கதக்கதே! ஆனால்,என்னவோ யாருக்கும் கண்டிக்கத் தோணலைங்கிற யதார்த்தையும் புறந்தள்ள முடியலை! பல பொண்ணுங்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்யும் கொடூர குற்றவாளிகளை சில சமயம் என்கெளண்டர் செய்யும் போது அந்த போலீஸை தலையில் வைத்துக் கொண்டாடி அந்த சட்டமீறலை நியாயப்படுத்தின சமூகம் தான் இது!
அந்த உளவியலில் இருந்து இதையும் பார்த்தால் தான் இந்த உண்மை விளங்கும்.
கொரானா காலகட்டமென்பது மக்கள் ஒட்டுமொத்தமாக போலீசாரை வெறுக்கும் காலகட்டமாக மாறி நிற்கிறது! எங்கெங்கும் போலீசாரிடம் உதை வாங்கியோ,உடமைகளை இழந்தோ மக்கள் நொந்து போயுள்ளனர்! இந்த நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நொறுக்கி,ஆசனவாயில் லத்தியை சொருகி, ஒரு தகப்பனையும்,மகனையும் போலீசார் கொன்று போடும் போது, மக்கள் பொங்கி எழாமல் இருப்பார்களா?
இந்த அநீதிக்கு ஆதரவாக ஒரு முதலமைச்சர் ’’உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறி இறந்தார்கள்’’ என்று வியாக்கியானம் தந்துவிட்டு, வழக்கை தூக்கி சி.பி.ஐயிடம் தந்து ஒதுங்குகிறார் என்றால், இதெல்லாம் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி என்பது மக்களுக்கு புரியாமலா இருக்கிறது…?
ஆக,போலீஸ் கொலை செய்யுமானால் அதற்கு ஒரு போதும் தண்டனை இல்லை என்ற நடைமுறை யதார்த்தால் எழுந்த விரக்தி மன நிலைதான் அந்த போலீசையும் தண்டிக்க யாரோ ஒருவன் பேசும் போது, அது ஆறுதலாகத் தெரிகிறது. உண்மையிலேயே அந்த நபர் போலீசை கொல்வதற்கு வாய்ப்பில்லை! விளம்பரத்திற்காகக் கூட பேசியிருக்கலாம். ஆனால்,அப்படி அந்த கொலைகாரக் காவலர்கள் யாராலோ கொல்லப்பட்டால் கூட அது இன்றைய சமூகமன நிலையில் ஒரு தீபாவளிக் கொண்டாட்டமாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது!
போலீசாரையும் தாக்க யாராவது ஒரு ஹீரோ சினிமாவில் வருவது போல வரமாட்டாரா? என்று ஏங்கும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற ஒரு விபரீதம் உருவாகுமானால்,அது சமூகத்தின் எதிர்காலத்திற்கே பேராபத்தாகப் போய்விடும்! விசாரணை கமிஷன்களும், நீதிமன்றங்களும் ,விசாரணை நடைமுறைகளும், நீதிபரிபாலன இழுத்தடிப்புகளும் குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடும் என்ற நிலைமை முற்றிலும் மாற்றப்பட வேண்டும்!
’’அதற்காக போலீசாரெல்லாம் காந்தியைப் போல அகிம்சாவாதியாக இருக்க வேண்டும்’’ என்று கூடுதல் டி.ஜி.பி ரவி போல நடைமுறையில் சாத்தியமில்லாதவற்றை பேசி,மாய்மாலம் செய்யக் கூடாது.
காந்தியே இருந்தாலும் போலீசார் அவர்களது கடமைக்கும்,கம்பீரத்திற்கும் இழுக்கானவற்றை உபதேசம் செய்யமாட்டார்! கூடுதல் டி.ஜி.பியானவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ’’ஒரு போலீசாரிடம் ஒருவர் அத்துமீறி நடந்தால்,அவர் மீது செக்ஷன் 395 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்றுத் தாருங்கள்! நீங்களே நிதானமிழந்து கொடூரமாக தாக்கிவிடாதீர்கள்!’’ என்று தான் சொல்லவேண்டும்.
அத்துமீறுபவர்களை சட்டத்தைக் கொண்டு தண்டிக்க முடியும். அதற்கான அணுகுமுறைகளைச் சொல்லி காவலர்களுக்கு பாடம் நடத்தினால் அது பயனளிக்கும். அதே சமயம் தானே செய்து முன் உதாரணமாக இருந்து காட்டமுடியாத ஒன்றை கூடுதல் டி.ஜி.பி ரவி மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது! அப்புறம் அவருடைய அத்துமீறல்களும் எவ்வளவோ இருக்கிறதே பேசுவதற்கு! சம்பவம் நடக்கும் போது அதை காணொளி பதிவு செய்யக் கூடாது என்றும் கூடுதல் டி.ஜி.பி சொல்கிறார்! இதிலிருந்து அவரது நோக்கம் நமக்கு தெளிவாகிறது!
போலீசாரை ஆட்சியில் இருப்பவர்கள் தான் தவறாக வழி நடத்துகிறார்கள்! தங்கள் தவறுகளையெல்லாம் போலீசாரைக் கொண்டு தான் அரங்கேற்றுகிறார்கள்! போலீசாரை நியாயமானவர்களாக நடக்க விடுவதில்லை ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும்! அவர்களை அடிப்படை உரிமையற்றவர்களாக நடத்துகிறார்கள்! அப்படியிருக்க போலீசார் குற்றம் செய்யும் போது,அவர்களை தண்டிக்கும் அறச் சீற்றத்தை நாம் இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
காவலர்கள் என்றால் நம்மை பாதுகாப்பவர்கள் என்ற நம்பிக்கை உணர்வு தான் மக்களிடம் உருவாக வேண்டுமேயன்றி, நம்மை பார்த்தாலே மக்கள் அச்சப்பட வேண்டும்,பணிந்து,வாய்பொத்தி எதையும் கேட்க வேண்டும் என்ற அதிகார மனநிலையில் இருந்து அவர்கள் அறவேவிடுபட வேண்டும்!
எளிதில் உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழப்பது, எளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ஆகியவற்றில் இருந்து விலகி தங்களை சம நிலைப்படுத்திக் கொள்ளும் பக்குவமே இன்றைய காவலர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகளாகும்!
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்

கருத்துகள் இல்லை: