வெள்ளி, 3 ஜூலை, 2020

ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க” – கதறும் நேரடி சாட்சி!

`ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க” – கதறும் நேரடி சாட்சி!  விகடன் :  சாத்தான்குளம்; உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம் தொடர்பாக மாவட்ட நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஆகியோர் கிளைச்சிறையில் இருப்போரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இதே சாத்தான் போலீஸாரால் தாக்கப்பட்ட பனைகுளத்தைச் சேர்ந்த ராஜாசிங் மூலமாகக் கசிந்திருக்கும் `திடுக்’ தகவல்கள் பதற வைக்கின்றன.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன.
”போலீஸ்காரங்க அடிச்சதுல ராஜாசிங்கோட உடல் முழுக்க உள்காயங்களா இருக்கு. உடல்வலி அதிகம் இருக்கறதா சொன்னார். ”ராஜாசிங், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்தப்போதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ரெண்டு பேரையும் அங்கே கொண்டு வந்திருக்காங்க. சிறைக்குள்ளே என்ன நடந்துச்சுன்னும் என்கிட்ட விரிவா ராஜாசிங் சொன்னார்.

‘உள்ளே வந்தபோதே ஜெயராஜால் அவரோட வேட்டியைக் கட்டுற அளவுக்குக்கூட உடம்பு தெம்பு இல்லை.
அப்படியே சுருண்டு படுத்துவிட்டார். சாப்பிடக்கூட எந்திரிக்க முடியாம தவிச்சார். பென்னிக்ஸ் உடம்புல நிறைய அடி. விலாவுல போலீஸ்காரங்க லத்தியால் குத்தினதுல மூச்சுவிட முடியாம சிரமப்பட்டார். உட்காரவோ படுக்கவோ முடியலை. ராத்திரி பூரா நின்னுக்கிட்டே இருந்தார்.

ரெண்டு பேரோட பின்பகுதியிலயும் ரத்தம் வழிஞ்சுக்கிட்டே இருந்தது. உரிய நேரத்துல ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தா பொழைக்க வெச்சிருக்கலாம்.
அவங்க ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க. இப்போ நான் உயிரோட இருக்கறதுக்கு காரணமே அந்த ரெண்டு உயிர்களும்தான்’னு ராஜாசிங் சொன்னார்” என்று கலங்கிய கண்களுடன் விவரித்தார் காந்தி.
சாத்தான்குளம் போலீஸின் கொலைவெறிக்கு இலக்காகி, கிட்டத்தட்ட உயிர்ப் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.
இதுபோல இன்னும் பலரும் இந்தச் `சாத்தான்’ போலீஸாரிடம் சிக்கி, சிதைந்துபோயுள்ளனர். அந்தக் கண்ணீர்க் கதைகளெல்லாம் தற்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்து பகீரிடச் செய்துகொண்டிருக்கின்றன.
அவை அனைத்தும் ‘நாங்க போலீஸ் இல்லை… பொறுக்கி’ என்று இந்த சாத்தான் போலீஸின் வெறியாட்டங்களை வெட்ட வெளிச்சம் போட்டுக்கொண்டிருக்கின்றன

கருத்துகள் இல்லை: