செவ்வாய், 30 ஜூன், 2020

நடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந்தது.. சாத்தான்குளம் கொலைகள் பற்றி செம்பருத்தி சீரியல்

tamil.samayam.com : செம்பருத்தி சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஜனனி அசோக் குமார். அவர் தற்போது சாத்தான்குளத்தில் போலீஸின் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலால் உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் ஆகியோர் பற்றி உருக்கமாக வீடியோவில் பேசி உள்ளார். தனது குடும்பத்திலும் இப்படி ஒரு மரணம் நடந்திருக்கிறது என கூறியுள்ள அவர், அப்போது முதல் போலீஸ் என்றாலே பிடிக்காது என கண்ணீருடன் கூறி உள்ளார்.
எல்லோருக்கும் வணக்கம்.. உண்மையில் இன்றைய நிலவரப்படி நாம் நாளைக்கு உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாது. அந்த மாதிரி ஒரு வாழ்க்கை தான் பலபேர் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொரோனா இந்த உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளை எத்தனையோ மக்களை பாதித்து, லட்சக்கணக்கான பேர் உயிரிழந்து இருக்காங்க. அதை யாரும் சென்று சரி செய்ய முடியாது. எதுவும் பண்ண முடியாது.
நம்மை பாதுகாத்து கொள்ள நாம் வீட்டில் தான் இருந்தாக வேண்டும்.
அது சரி. அது எல்லாருக்கும் புரியும் ஒரு விஷயம் தான். மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அனைவரும் அது பற்றிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
ஒரு கடை அடைக்கிறதுக்கு ஒரு 15 நிமிஷம் லேட் ஆனால், இரண்டு பேர் உயிரிழப்பங்க அப்படினா.. எந்த விதத்துல இது நியாயம். கொஞ்ச நாளாவே இந்த சோசியல் மீடியாவுல எப்போவும் நெகட்டிவாக இருப்பதால்.. எல்லோரும் வீட்டில் தான் இருக்கிறோம்.. கொஞ்ச சுயநலமாக மாறிட்டோம். கொஞ்ச நாள் சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவு போட வேண்டாம் என விலகி இருந்தேன். எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் கிடையாது. அதனால் இந்த நியூஸ் தெரியவே இல்லை. இன்று காலை தான் இன்ஸ்டாகிராம் லாக் இந்த பண்ணேன். பண்ண உடனே நான் பார்த்த விஷயங்கள் வந்து.. ஒரு மிருகம் தான் பசிக்கு வேறொரு மிருகத்தை வேட்டையாடி சாப்பிடும். அதுவும் பசித்தால் தான் வேட்டையாடி சாப்பிடும். ஆனால் கொஞ்சம் கூட மனித தன்மையே இல்லாமல் இரண்டு பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். பொதுவாகவே எனக்கு ரத்தம், விபத்து ஆகியவற்றை பார்த்தால் எனக்கு ரொம்ப பயம். ஆனால் முதல் முறையாக என வாழ்க்கையில் கண்ணால் பார்க்காமல் நான் வந்து கதறி அழுதேன் இன்று காலை. என்னால் சத்தியமாக தாங்கிக்க முடியலங்க.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிலாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீஸ் கொலை செய்தது வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் நம் கண் முன்னே பதிவிட்டார்கள். நாம் குரல் கொடுத்தோம். அதை செய்தவரை பணி நீக்கம் செய்தனர். அது போதாது என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அந்த தண்டனை கூட இங்கு யாருக்கும் கிடைக்கவில்லையே. சஸ்பெண்ட் பண்றதும் எந்த விதத்தில் தண்டனையாகும்.


எதுவுமே நம்மையே, நம்மை சார்ந்தவர்களையோ பாதிக்காத வரை அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. அது பற்றி ஒரு 10-15 நாள் பேசுவோம். அதற்கு பிறகு மறந்துவிடுவோம். இது என்னை இவ்ளோ பாதிக்க காரணம் என்னவென்றால், இதே மாதிரி ஒரு சம்பவம் என் குடும்பத்தில் நடந்திருக்கிறது. அன்று நான் சின்ன பெண்ணாக இருந்தேன். என்னால் எதுவும் பண்ண முடியல. 2007ல் என் அண்ணனை நான் இழந்தேன். அன்று முதல் போலீஸ் என்றாலே எனக்கு பிடிக்காது. காசு என்கிற ஒரு விஷயத்திற்காக மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் ரொம்ப கேவலமாக உங்களால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது. என் அண்ணனோட உடலை கொடுக்காமல் 'இவ்ளோ காசு கொடுத்தால் தான் எடுத்து கொடுப்போம்' என சொன்னாங்க. என்னைக்கு இதற்கெல்லாம் நியாயம் கிடைக்கும்.

நடந்ததை நம்மால் மாற்ற முடியாது. அதே சமயத்தில் நம்மை மாதிரி சக மனுஷங்க அவங்க. உங்க அப்பாவுக்கோ அண்ணனுக்கோ இப்படி நடந்திருந்தால் சும்மா இருந்திருப்பீர்களா. அதனால் நம்மால் முடிந்த வரை சமூக வலைத்தளத்தில் ரொம்ப பெரிய விஷயமாக இதை கொண்டு போகணும்.

கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை நியாயமாக யாராலும் ஏற்று கொள்ள முடியாது. அதனால் அனைவரும் குரல்கொடுங்கள்.

என ஜனனி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: