வியாழன், 2 ஜூலை, 2020

இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி

   மாலைமலர் : கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி
ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில், இந்தியாவில் மட்டும் 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்களை காணவில்லை. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

இந்தியாவில், கடந்த 2013-ம் ஆண்டு 2017-ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் பெண் குழந்தைகள், பிறப்பிலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு ஆவர். பிறந்த பிறகு அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆவர்.
பல நாடுகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதால், ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காமல், திருமணம் தள்ளிப்போகிறது. மணப்பெண்கள் தட்டுப்பாட்டால், குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்புள்ளது.
50 வயதாகியும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் இந்த ஆண்கள் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும்.
இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில், பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை விளக்கி பிரசாரம் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: