திங்கள், 29 ஜூன், 2020

பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா!

பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா! மின்னம்பலம் :  துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 575 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் முழுமையான கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருமான ஓ.ராஜாவுக்கு சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்துள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓ.ராஜாவின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் சுகாதாரத் துறையினர் சேகரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார், மேலும் திமுகவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் துணை முதல்வரின் சகோதரருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிமுக வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக சென்னையிலிருந்து தேனி சென்ற பன்னீர்செல்வம், பெரியகுளம் செல்லாமல் தனது சட்டமன்ற தொகுதியான போடிநாயக்கனூரிலுள்ள வாடகை வீட்டில் தங்கி பணிகளை கவனித்து வருகிறார்.
எழில்

கருத்துகள் இல்லை: