திங்கள், 7 அக்டோபர், 2019

நடிகை யாசிகா ஆனந்த் சொகுசு கார் மோதி வாலிபர் படுகாயம்: நுங்கம்பாக்கத்தில்.. விருந்தில் குடித்து விட்டு காரோட்டினார்? வீடியோ


 தினகரன் : சென்னை: பிரபல நடிகை இருந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று இருந்த வாலிபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக நடிகையின் ஆண் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் நேற்று அதிகாலை சொகுசு கார் ஒன்று வேமாக வந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது கோட்டூர்புரம் ஐ பிளாக்கை சேர்ந்த பரத் (23) ஹாரிங்டன் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளருக்கு சப்ளை செய்வதற்காக உணவு வாங்க சாலையோரம் நின்று இருந்தார். இவர் ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்தான் சாலையில் தாறுமாறாக வந்த சொகுசு கார் பரத் மீது பயங்கர வேகத்தில் மோதி அவரை தூக்கி வீசியது. இதில் அந்த ஊழியர் பரத் படுகாயமடைந்தார். மேலும் அத்துடன் நிற்காமல் அருகில் இருந்த கடையின் மீது மோதி கார் நின்றது.


உடனே அருகில் இருந்தவர்கள் காயடடைந்த பரத்தை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நல் வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர்.

அப்போது பிரபல நடிகை ஒருவர், வளசரவாக்கத்தை சேர்ந்த தனது ஆண் நண்பர்களான சூர்யா(24) மற்றும் அவரது நண்பர் பாலாஜி ஆகியோருடன் இரவு விருந்து முடித்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் காரில் இருந்த நடிகையை போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். பிறகு விபத்து ஏற்படுத்திய சூர்யா மற்றும் பாலாஜியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: