புதன், 9 அக்டோபர், 2019

ரஃபேல் டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' - சந்தனப் பொட்டு..முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத்!

விகடன் : பிரான்ஸிடமிருந்து 63,460 கோடி ரூபாய் செலவில் 126 ரஃபேல் போர்
விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்குப் பிரதமர்
மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முதல் விமானத்தை 36 மாதங்களுக்குள்ளும் அனைத்து விமானங்களையும் 67 மாதங்களுக்குள்ளும் தயாரித்து ஒப்படைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.
2016ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன எனவும், இதன்மூலம் அரசுக்கு இழப்பு நேரிட்டுள்ளது எனவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்த நிலையில் பிரான்ஸிடமிருந்து முதல் விமானத்தைப் பெறுவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பாரிஸ் சென்றிருந்தார்.
 இந்தியாவில் ஆயுத பூஜைகள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பாரிஸ் பறந்த ராஜ்நாத் சிங் அங்கு அதிபர் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பாரிஸிலிருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் ரஃபேல் விமானம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கும் மெரிக்னா பகுதிக்கு பிரான்ஸின் ராணுவ விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு இருந்த ரஃபேல் விமானத்தைப் பார்வையிட்டார்.

பின்பு ``இது வரலாற்றின் மிக முக்கிய நாள். இன்றைய நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவது இருநாடுகள் இடையேயான உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. ரஃபேல் விமானங்கள் சொன்ன நேரத்தில் தரப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. 36 விமானங்களும் சொன்ன நேரத்தில் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இதன்மூலம் இந்தியா- பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இந்த இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்கவே விரும்புகிறேன். ரஃபேல் என்பது ஒரு பிரெஞ்சு சொல், இதற்கு இந்தியில் "பலமான காற்று" என்று பொருள். அதன்படி பார்த்தால் ரஃபேல், அதன் பெயருக்கு ஏற்ப வாழும் என்று நான் நம்புகிறேன்" எனப் பேசினார் ராஜ்நாத் சிங்.
இருநாட்டு அதிகாரிகளின் உரைக்குப் பிறகு முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்குச் சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார் ராஜ்நாத் சிங். அதேபோல் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும், முன்பகுதியில் ஓம் என்று இந்தியிலும் எழுதினார் ராஜ்நாத் சிங். பூஜைக்குப் பின் ரஃபேல் விமானத்தின் பறந்தார் ராஜ்நாத். முதல் ரஃபேல் விமானம் இன்று ஒப்படைக்கப்பட்டுவிட்டாலும், வழக்கமான நிர்வாக நடைமுறைகள் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதமே ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது. 36 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு காரணம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான தளம் வியூக அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த விமானப் படை தளம் என்று விமானப்படை வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. அதன் காரணமாகவே அங்கு நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. மீதம் இருக்கிற 18 விமானங்கள் மேற்கு வங்கத்தின் ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. ரஃபேல் போர் விமானங்களை நிறுத்திவைப்பதற்காக இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில் தேவையான உள்கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: