ஞாயிறு, 6 அக்டோபர், 2019

அருவி உச்சியில் இருந்து விழுந்து 6 யானைகள் இறப்பு.. 2 யானைகள் மீட்பு: தாய்லாந்தில் பரிதாபம்


.hindutamil.in :பாங்காக். தாய்லாந்தில் வடகிழக்குப் பகுதியில் அருவி உச்சியில் இருந்து கீழே விழுந்து 6 யானைகள் பலியாகின. யானைகள் பிளிறல் சத்தம் கேட்டு வந்த வனக் காவலர்கள் இரு யானைகளை நீண்ட போராட்டத்துக்குப்பின் மீட்டனர்.
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 'காவோ யா' தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.
இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்'(ஹெல் அபிஸ்) எனும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து அந்த அருவி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இந்த பிளிறல் சத்தத்தைக் நீண்ட நேரத்துக்குப்பின் கேட்ட வனப் பாதுகாவலர்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.

அங்கு பார்த்தபோது, யானைகள் கூட்டம் அருவியின் பள்ளத்தில் விழுந்து உதவிக்காக பிளிறியடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், நீண்ட போராட்டத்துக்குப்பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை அங்கிருந்து மீட்டனர்.
அதன்பின் காலைநேரம் வந்தபின் அந்த பகுதியில் பார்த்தபோது, அருவியின் உச்சியில் இருந்து கீழே விழுந்ததில் 6 யானைகள் உடல்சிதறி பலியாகிக் கிடந்ததைப் பார்த்து வனப்பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனச்சரணாலயத்தின் செய்தித்தொடர்பாளர் சம்போச் மணிராத் நிருபர்களிடம் கூறுகையில், " யானைகளின் உதவிக்கான பிளிறல் சத்தம் கேட்டு நாங்கள் அனைவரும் அந்த அருவி இடத்துக்கு சென்று பார்த்தபோது, யானைகள் ஒன்றன்மீது விழுந்து, பாறைகளுக்கு இடையே சிக்கி உதவிக்காக அலறிக் கொண்டு இருந்தன.
அதன்பின் நாங்கள் சென்று யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டு, யானைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். இதில் உயிரோடு இருந்த இரு யாணைகள் மட்டும் காட்டுக்குள் விரட்டினோம்.
ஆனால் மற்ற யானைகள் அருவியின் உச்சியில் இருந்து விழுந்ததில் இறந்துவிட்டன. எவ்வாறு விழுந்தன, கால் தடுக்கி விழுந்தனவா, வழுக்கிவிட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இரவு முழுவதும் பெய்த மழையால் பாறைகள் வழுக்கிவிட்டு இருக்கலாம். மீட்கப்பட்ட இரு யானைகளும் பயத்தில் இருப்பதால், எங்கும் செல்லாமல் அருவிக்கு அருகேயே நிற்கின்றன" எனத் தெரிவித்தார்
பிடிஐ<

கருத்துகள் இல்லை: