வியாழன், 10 அக்டோபர், 2019

அன்புமணிக்கு அமைச்சர் பதவி.. மோடியுடன் ராமதாஸ்!

மோடியுடன் ராமதாஸ்: அன்புமணிக்கு அமைச்சர் பதவி?மின்னம்பலம் : பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (அக்டோபர் 10) காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினர். 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையே மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமரிடம் ராமதாஸ் அளித்த மனுவில், “29 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும், சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது” என்றும் பாமக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “மார்ச் மாதம் வண்டலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் மனு அளித்தேன். அதனை அங்கேயே முழுவதும் படித்தார். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது இரண்டாவது மனு அளிப்பதாக பிரதமரிடம் தெரிவித்தேன். 1500 டிஎம்சி கோதாவரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில், தமிழகத்துக்கு 200 டிஎம்சி கிடைத்தால் டெல்டா விவசாயிகளும், குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள 5 கோடி மக்களும் பயன்பெறுவர் என்று சொன்னேன். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து இதில் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
20 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தொடர்பான ஸ்டாலின் அறிவிப்பு குறித்து பதில் கூறிய ராமதாஸ், “ஸ்டாலின் ஒரு வணிகர். நல்ல வணிகரிடம் சரக்குகள் இருக்கும். ஆனால், ஸ்டாலினிடம் எந்த சரக்குமே இல்லை. பொய் மூட்டைகளை வைத்துக்கொண்டு புளுகுகிறார்” என்று விமர்சித்தார்.
பிரதமர் சென்னை வரவுள்ள நிலையில், அங்கு அவரை சந்திக்காமல் டெல்லியில் சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு, “சீன அதிபர் வரும்போது பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருக்காது. கடந்த வாரமே சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தினந்தந்தி நூற்றாண்டு விழாவில் என்னைப் பார்த்து, ஏன் நீங்கள் டெல்லிக்கே வரமாட்டேன் என்கிறீர்கள் என பிரதமர் மோடி கேட்டார். அதனடிப்படையில் சந்தித்துப் பேசினோம்” என்று விளக்கம் அளித்தார்.
அன்புமணி அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக பேசினீர்களா என்னும் கேள்விக்கு, “அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கப்போவதுமில்லை. அது பாமகவுக்கு தேவையுமில்லை” என்று சிரித்தபடியே பதிலளித்தார் ராமதாஸ்

கருத்துகள் இல்லை: