

ஆகஸ்டு 2017-ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 -க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியானார்கள். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு மாநில அரசாங்கத்தின் அலட்சியமே இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என தெரியவந்தது.
தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என விசாரனை அறிக்கை கூறியுள்ளதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன் வைத்த மருத்துவர் கஃபீல் கான்.
கஃபீல் கானின் கைது கண்டனத்துக்குள்ளான நிலையில், அவர் மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. சமீபத்தில் ஆணையம் அளித்த அறிக்கையில், கஃபீல் கான் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என தெரியவந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மருத்துவ கல்வி முதன்மை செயலர் ரஜனீஷ் துபே ஊடகங்களிடம், முந்தைய விசாரணைக் குழுவால் சில உண்மைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அரசாங்கம் ‘அந்த உண்மைகளை’ பரிசீலித்து வருகிறது என்றும் கூறினார். கூடவே, மருத்துவர் கஃபீல் கான் ‘குற்றமற்றவர்’ என நிரூபிக்கப்பட்டு விட்டார் என கருதுவது சரியல்ல என்றும் பேசினார்.
சம்பவம் நடந்தபோது தான் குழந்தைகள் வார்டின் பொறுப்பாளராக இல்லை என்று கான் விசாரணைக் குழுவிடம் தெரிவித்ததாக முதன்மை செயலர் கூறினார். “அந்தக் காலகட்டத்தில் அவர் அதன் நோடல் அதிகாரியாக பணியாற்றினார் என்பதைக் காட்டும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.
“இந்த ‘உண்மைகளை’ கணக்கில் கொண்டு இறுதி அறிக்கை பின்னர் வெளியிடப்படும். அதுவரை கான் மீதான குற்றச்சாட்டுகளை புறம்தள்ள முடியாது” எனவும் அவர் பேசினார். விசாரணை அறிக்கையை வெளியிட்டதாகவும், தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் கான் மீது துபே குற்றம்சாட்டினார்.
அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. இப்போது விசாரணை அறிக்கை உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள போதும் அதை ஏற்காமல் முதன்மை செயலரை வைத்து கான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்கிறது.

கடந்த வாரம் கஃபீல் கான் தன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை ஆணையம் தவறானவை என சொல்லிவிட்டதாக தெரிவித்திருந்தார். ஆதித்யநாத் அரசாங்கம் குழந்தைகள் வெவ்வேறு நோய்களால் இறந்ததாக கூறியதே தவிர, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்ல என்றது.
2018-ம் ஆண்டு ‘தி வயர்’ மேற்கொண்ட விசாரணையில் மாநில அரசாங்கம் ஆக்ஸிஜன் உபகரணங்களுக்கு அளிக்க வேண்டிய பணம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டது தெரியவந்தது. லட்சக்கணக்கான ரூபாய் பணம் தரவேண்டியிருந்ததால் குறிப்பிட்ட நிறுவனம் சப்ளையை நிறுத்திக்கொண்டது.
அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்துவிட்ட நிலையில், அந்தப் பழியை மருத்துவர் கஃபீல் கான் மீது தூக்கிப்போட்ட உ.பி. அரசாங்கம், அவரை கைது செய்து ஒன்பது மாதங்கள் சிறையில் அடைத்தது. இப்போதும் அவர் பணிநீக்கத்தில் இருக்கிறார். ‘உரிய மரியாதை’யுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கான் கோரியிருந்த நிலையில், ஆதித்யநாத் அரசாங்கம் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
காவிக் கிரிமினல்களின் வக்கிர சிந்தனைக்கு இதுவும் ஒரு உதாரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக