புதன், 29 நவம்பர், 2017

செவிலியர்கள் அனைவரும் பணி நீக்கமா? சென்னையில் போராட்டம் நடத்தி வரும் அரசு ..

nurseதினமணி :சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்கள்.
சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் அரசு செவிலியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட அரசு செவிலியர்களின் 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். ஒரு சில செவிலியர்களை மட்டும் அமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்; பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை போராட்டம் தொடரும் என ஏராளமான செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.28) போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
கடந்த 2015 -ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் செவிலியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடவும், காலமுறை ஊதியம் வழங்கிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முதலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து டிஎம்எஸ் வளாகத்தில் திங்கள்கிழமை-செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  
இதனிடையில் செவிலியர்களில் சிலர் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு செவிலியர்களின் 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அரசு செவிலியர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 
இதைத் தொடர்ந்து சில செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால், இன்னும் பலர் கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை தொடரும் என அறிவித்து ஏராளமான செவிலியர்கள் மூன்றாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு பொதுசுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து செவிலியர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பணி நீக்கம் செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது செவிலியர்கள் மத்தியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: