திங்கள், 27 நவம்பர், 2017

2017 கொல்கொத்தா படவிழா! |"டுலெட்" சிறந்த இந்திய மொழிபடத்துக்கான விருதை பெற்றது

மின்னம்பலம் :இயக்குநர் செழியனுடன் ஒரு மாலை! தொகுப்பு: தினேஷ் பாரதி- 2017 கொல்கத்தா சர்வதேசப் பட விழாவில் இந்திய மொழிப் படங்களுக்கு இடையிலான போட்டிப் பிரிவில் கலந்துகொண்ட ‘டுலெட்’ என்னும் தமிழ்ப் படம் இந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. இதை இயக்கியவர் செழியன். பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ திரைப்படம் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ வரை தமிழின் முக்கியமான ஒளிப்பதிவாளராகக் கவனம் ஈர்த்துவரும் செழியன் தற்போது இயக்குநராகவும் வெற்றி கண்டுள்ளார்.
ஓவியம் வரைவதில் ஆர்வம்கொண்ட குழந்தை, இயற்கையின் மீது காதல்கொண்ட மனைவி, சினிமாவால் உலகையே புரட்டிப்போட நினைக்கும் கணவன் என்று பரந்த சிந்தனையோடு வாடகை வீட்டில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பம், அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு ஐடி துறை சார்ந்த ஒருவரைப் புதிதாகக் குடியமர்த்த நினைக்கும் வீட்டு ஓனர், அந்தக் குடும்பத்தினரை 30 நாள்களுக்குள் வீட்டை காலிசெய்யச் சொல்கிறார். இதன் காரணமாக புதிய வீடு ஒன்றை வாடகைக்குத் தேடி மோட்டார் சைக்கிளில் செல்லும் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கூறும் படமாக ‘டுலெட்’ உருவாகியுள்ளது.

செழியன் ஓவியர், இசை கற்றவர், புகைப்படக் கலைஞர், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர். அதைத் தவிர எழுதவும் செய்கிறார். உலக சினிமா, தமிழ் சினிமா, இசை ஆகியவை குறித்து முக்கியமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திரைப்பட ஒளிப்பதிவுக்காக தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்.
நமது மின்னம்பலம் அலுவலகத்துக்கு வந்த செழியன் மாலை நேரச் சந்திப்பின் உரையாடலில் தனது அனுபங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவின் எல்லா மொழியிலிருந்தும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்கள் கொல்கத்தா திரை விழாவில் கலந்துகொண்டன. கடைசியாக 10 படங்கள் போட்டியிட்டன. அந்த 10 படத்தில பெஸ்ட் படமா ‘டுலெட்’ தேர்வானது. இந்தப் படத்தை பலரும் பாராட்டினாங்க. ஐஸ்லாந்த்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர், ‘உங்க நாட்டுல ஐடி பிரச்னை போல எங்க நாட்டுல டூரிஸம் பிரச்னை இருக்கு’ என்றார். ஒரு கடிதத்தில எக்ஸ்டார்டினரி திரைப்படம் என்று எழுதிக் கொடுத்தார். “இவ்வளவு காத்திரமான படைப்பை தந்திருக்கீங்க. உங்களோட அடுத்த படத்தை காண ஆவலோட இருக்கோம்” என்று பாராட்டியதை மகிழ்ச்சியுடன் கூறினார். அதன் பின்னான உரையாடலில்...
ஒரு படத்துக்கு டைமிங் எந்தளவு முக்கியத்துவம்?
‘எதை செஞ்சாலும் திருத்தமா செய்யணும்!’ஒரு படத்துக்கு டைமிங் என்பது மிக முக்கியம். உதாரணமா நம்முடைய மின்னம்பலத்துலகூட ரெண்டு நிமிட வாசிப்பு, மூணு நிமிட வாசிப்புன்னு இருக்கு. அதையும் தாண்டி புளுவேல் போன்ற சிறப்புக் கட்டுரைகள் அதிக நேர வாசிப்புக்காக இருக்கு. இப்படி வகை பிரிச்சு இருக்கிறதால வாசகனுக்கு அது எளிமையாக இருக்கும். அதேபோல ஒரு படத்தைப் பார்க்க ரசிகனை உட்கார வைக்க டைமிங் முக்கியம். இந்தப் படத்தை எடுக்கும்போதுதான் ஒவ்வொரு நிமிடத்தையும் எந்தளவுக்கு உபயோகப்படுத்தணும்னு கத்துக்கிட்டேன்.

உங்கள் எழுத்திலும் ஒளிப்பதிவிலும் அபாரமான நேர்த்தி இருக்கிறது. இதை எப்படிச் சாதிக்கிறீர்கள்?
என் அப்பா ஓவியர். சின்ன வயசுல அவரைப் பார்த்துப் படம் வரைய ஆரம்பித்தேன். ஒருநாள் பள்ளியில் நான் வரைந்த படம் சரியாக வரவில்லை. சில தவறுகள் செஞ்சிருந்தேன். அதற்குப் பரிசு கிடைக்கவில்லை. ரொம்பவும் நொந்து போனேன். அப்போது என் அம்மா, ‘எதை செஞ்சாலும் திருத்தமா செய்யணும்’ அப்படீன்னு சொன்னாங்க. அது மனசுல ஆழமா பதிஞ்சிது.
சுந்தர ராமசாமியைப் படிக்கும்போது அவர் எழுதியிருந்த ஒரு வாக்கியம் ஆழமா பாதிச்சது. நாலு வாக்கியத்துல சொல்லக்கூடியதை அஞ்சு வாக்கியத்துல சொல்லக் கூடாதுன்னு எழுதியிருப்பார். படைப்புக்கு நேர்த்தியும் கச்சிதமும் எவ்வளவு முக்கியம்னு எனக்குப் புரியவெச்ச வார்த்தை இது.
நீங்கள் நவீன இலக்கிய வாசிப்பு உள்ளவர். நவீனத் தமிழ்ப் படைப்புகளில் எதைப் படமாக்க விரும்புவீர்கள்?
அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற படைப்பாளிகளோட நாவல், சிறுகதை போன்றவற்றை படமாக்கணும்னு நினைக்கிறேன். குறிப்பாக சுந்தர ராமசாமியோட ஒரு புளிய மரத்தின் கதையைப் படமாக்கணும்னு விரும்புறேன். ஒரு புளிய மரத்தின் கதையை எடுத்தா அது கண்டிப்பா உலக சினிமாதான்.

படைப்பு உருவாகும் தருணம் பற்றி…
ஜானக்ஷே கர்ணான்னு ஒரு போட்டோகிராபர் மைக்கேல் ஜாக்சனோட பர்சனல் போட்டோகிராபர். ஈரானியப் போர் சம்பவங்களை போட்டோ எடுக்கிறார். எடுக்க எடுக்க ஒரு கட்டத்தில மூளை வேலை செய்யாம ஸ்டன்னாகிடுது. ஒருநாள் அவர் வீட்டு ஜன்னல்ல ஒரு வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருக்கு. அதைப் படமெடுக்கும்போது கேமராவிலிருந்து வெளிவந்த கிளிக் சவுண்டுனால அவரோட மைண்ட் ஓப்பன் ஆகிடுது.
படைப்பாளியின் பொறுப்பு பற்றி…
டெனின் கார்ட்ன்னு ஒரு போட்டோகிராபர் பேமஸ் போட்டோ ஒண்ணு எடுத்தார். ஒரு பெரிய கழுகு பக்கத்துல ஒரு குழந்தை இருக்கிற மாதிரியான ஒரு போட்டோ. நிறைய பாராட்டுகளையும் விருதுகளையும் குவிச்சது. ஆனா “ஒரு குழந்தையை கழுகு தூக்க போகுது அத காப்பாத்தாம போட்டோ எடுத்திருக்கிறயே” என்ற கேள்வி அவரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ள வைத்தது.
கந்து வட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்தபோது போட்டோ எடுத்தார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையாகவே அப்படியான பிம்பம் தற்போது உருவாகியிருக்கு. சமீபத்தில் வெளியான ஒரு கேலி சித்திரத்தில ஒருவர் குளத்தில் விழுந்து தத்தளிக்கிறார். அவரைச் சுத்தி நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். அப்படியான மனநிலைதான் தற்போது உருவாகியிருக்கு. இப்போதெல்லாம் கார் விபத்தோ, டூவிலர் விபத்தோ நடக்கும்போது அதை எளிமையா கடந்து போகிற மனநிலைதான் இங்கு எல்லார்கிட்டயும் உருவாகியிருச்சு. அது மோசமான சினிமா மூலமா உருவாகியிருக்கு.

ஒரு படத்தை எடுக்கும்போது அதில் இருக்கும் சிக்கல்களை எப்படி அணுகுகிறீர்கள்?
சினிமாவுல ஆர்ட் சினிமா, கமர்ஷியல் சினிமா என்று இல்லை. நல்ல சினிமா கெட்ட, சினிமா என்ற இரண்டுதான் இருக்கு. சீரியஸ் சினிமா எடுக்கலாம்னு தயாரானபோது நண்பர்கள் எல்லாம் எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு சொன்னாங்க. படத்தை எடுக்க வேண்டுமென்ற உறுதியில் தயாரிப்பாளர்களைச் சந்திச்சேன். முதலில் சம்மத்திச்சவங்க பின்னர் ஏதோ காரணம் காட்டி மறுத்திட்டாங்க. என் புத்தகங்களைப் படிச்ச வாசகர் ஒருவர், உங்கப் புத்தகத்தைப் படிச்சிருக்கேன், நான் உங்கப் படத்தை தயாரிக்கிறேன்னு முன்வந்தார். எல்லாத்துக்கும் தயாராகி படப்பிடிப்புக்கு போகும்போது திடீரென்று ஒருநாள் பணம் பூராவும் செல்லாம போச்சு. இதனால தயாரிப்பாளர்கள் ஒதுங்க, நாமே தயாரிச்சு எடுக்கலாம்ன்னு முடிவெடுத்து, நானே எடுக்க ஆரம்பிச்சேன். இந்த படத்தோட திரையிடல்கள் முடிஞ்ச பிறகு படத்துக்கான செலவை வெளியிட போறேன். அதுதான் எல்லாருக்கும் ஆச்சர்யத்தைத் தரப் போகுது.
சினிமா இந்தச் சமூகத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கா, இல்லை மாற்றத்தை ஏற்படுத்துமா?
மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல. ஆனா, சினிமா எனக்கு மாற்றத்தை ஏற்படுத்திருக்கு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்தே நான் சினிமாவைப் பார்த்து வந்திருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலயும் அது மாற்றத்தை ஏற்படுத்தி வந்திருக்கு. என்னை அதிகமா பாதிச்சது பை சைக்கிள் தீவ்ஸ், பதேர் பாஞ்சாலி போன்ற திரைப்படங்கள்தான். அந்தப் படங்களைப் பார்த்த பிறகுதான் எனக்கு இப்படி ஒரு படம் பண்ணணும்கிற ஆசை வந்தது. அந்த எண்ணம்தான் இப்போது வெளிவந்துள்ள டுலெட். இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல்னா, பின்னணி இசையில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கோம். பின்னணி இசை இல்லையே என்ற உணர்வே இதில் ஏற்படாது.

நல்ல சினிமா என்றால் என்ன?
நல்ல சினிமான்னா என்னன்னு நான் சொல்றதவிட ஒரு இயக்குநர் சொன்ன கருத்தைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். “திரையில் நீங்க பார்க்கிறத நம்ப முடிஞ்சா அது நல்ல சினிமா. நம்ப முடியலன்னா அது கெட்ட சினிமா”. இந்த கருத்தை நான் ஏத்துக்கிறேன். வாழ்க்கைக்கு நெருக்கமா இருந்தா, அதுதான் நல்ல சினிமா. ஒரு நல்ல சினிமா பார்க்கும்போது, ஒரு நல்ல இலக்கியத்தைப் படிக்கும்போது நம்மளோட ரசனை மட்டம் உயரும் என்பது என் எண்ணம்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் இன்று சிறிய அளவில் எளிமையாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும். மொபைல் கேமிராகூடப் போதும். ஆனால், அந்தப் படத்தை எடிட் செய்வதற்கான எளிய டூல்ஸ் இருக்கா?
அப்படி ஏதும் இல்லை. அதற்கான எடிட்டர்கிட்டதான் போகணும். எடிட்டிங் என்பது மனித உடலில் உள்ள மூட்டுக்கள் மாதிரி. தேவைப்படும் இடத்தில கட் இருக்கணும். ஒரு கதையோ, கட்டுரையோ எழுதும்போது கமா, புல் ஸ்டாப் வைப்போமே... அந்த மாதிரி இருக்கணும். எடிட்டிங் பண்ண எடிட்டர்கிட்டதான் போகணும். ஆனா, இப்போ ஆன்லைன்லயே எடிட்டிங் பண்ணுறதுக்கான ஆப்ஷன்ஸ் இருக்கு.
சினிமாவில் கருத்து சுதந்திரம் இருக்கா?
கண்டிப்பா இருக்கு. ஆனா, எதையும் நேரடியா சொல்லாம நாசுக்காக சொல்லணும். உதாரணத்துக்கு சார்லி சாப்ளினோட தி கிரேட் டிக்டேட்டர் படத்துல ஹிட்லர் கேரக்டர்ல சாப்ளின் நடிச்சிருப்பாரு. அதுல ஒரு சீன்ல உலக உருண்டைய காலால எட்டி உதைப்பாரு. ஹிட்லரை விமர்சிச்ச இந்த படத்தை ஹிட்லரே பார்த்து ரசிச்சிருக்கார்.
விமர்சனம் பற்றி உங்கள் கருத்து?
நாம எதை விமர்சித்தாலும் அது ரசிக்கும்படியாக இருக்கணும். நியாயமா இருக்கணும். கதா அவார்டு வாங்கும்போது ஒரு முறை டெல்லியில சுந்தர ராமசாமியைச் சந்திச்சப்ப ‘பிதாமகன் விமர்சனம் நல்லா இருக்கு’ என்றார். ‘பாசிட்டிவ்வான விஷயத்தைச் சொல்லிட்டு நெகட்டிவ்வான விஷயத்தையும் சொல்லியிருக்கீங்க’ என்றார். எந்த ஒரு படைப்பையும் பற்றிக் குறைகள் மட்டுமே சொல்லாமல் நிறைகளையும் சொல்லணும்.

கருத்துகள் இல்லை: