புதன், 29 நவம்பர், 2017

போராட்டத்தை கைவிட்ட செவிலியர்! நீதிமன்றம் கடுமையான உத்தரவு ....

 போராட்டத்தை கைவிட்ட செவிலியர்!மின்னம்பலம் : செவிலியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துத் தடைவிதித்தது. உயர் நீதிமன்றம் உத்தரவை அடுத்து செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். செவிலியர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டாம். செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், உடனே பணி நீக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. செவிலியர்கள் போராட்டத்தால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுசெல்க என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் 3-வது நாளாக இன்று(நவம்பர் 29) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை நீதிமன்றத்தில் ஆவடியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில் செவிலியர்களின் இந்தப் போராட்டத்தால் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் இந்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
செவிலியர்கள் சார்பாக அமர்த்தப்பட்ட வக்கீல், செவிலியர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது. அவர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கான ஊதியம், சலுகை போன்றவையும் வழங்கவில்லை. 2 வருடமாக வெறும் 7,700 ரூபாய் மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. எந்த ஊதிய உயர்வும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக செவிலியர்கள் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் இவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வரும். மேலும் விரைவில் செவிலியர்களுக்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டஉயர் நீதிமன்றம், செவிலியர்கள் போராட்டம் கண்டனத்திற்குரியது என்று தீர்ப்பு அளித்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றால் அது குறித்து பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறியது.
மேலும் செவிலியர்கள் போராட்டத்தின் உண்மை நிலையறிந்து தமிழக அரசு செயல்படும் என்றும் இந்த வழக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் இன்பசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது: இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செவிலியர்களுக்கு வரும் ஜனவரி மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் செவிலியர்கள் 3 நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்உயர் நீதிமன்றம் இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது. இதைதொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கருத்துகள் இல்லை: