
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை நேற்று (அக்டோபர் 1) திறந்து வைத்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பின்னர் ஏ.டி.சி. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், “தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் கோபத்தைவிட திமுக மீதுதான் அவர்களுக்கு அதிகமான கோபம் இருக்கிறது. இந்த ஆட்சியை திமுகவால் கலைக்க முடியவில்லையே என்கிற கோபம்தான் அது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும், அதனால்தான் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க அவர் வரவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே புதிய ஆளுநரின் நியமனம் நடைபெற்றுள்ளது. இடைத்தேர்தல்களில் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகைகளும் பொய்தான்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அரசின் சார்பில் மருத்துவக் குறிப்புகள் வெளியாகின. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவக் குறிப்புகள் ஏன் வெளியிடப்படவில்லை?. முதல்வராக இருந்தவரை ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வம் கவலைப்படவில்லை. நெடுவாசல் உள்ளிட்ட போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. திமுகதான் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது” என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக