சனி, 7 அக்டோபர், 2017

மாற்றுப்பாலினத்தவரை அரசியல்படுத்த வேண்டிய மிகையான தேவை... கிருபா முனுசாமி!

kirubamunusamy : வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார தொடர்வண்டியில், பயணிகளிடம் ஒரு திருநங்கை பணம் கேட்டுக்கொண்டிருந்தார்.
மாற்றுப்பாலினத்தவரை சமூக புறக்கணிப்பு செய்து, பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளியது நாமே என்ற வகையில், அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கொடுப்பது என் வழக்கம். அப்படி என் பையிலிருந்து பணம் எடுக்க முயலும் போது, என் எதிரே அமர்ந்திருந்த 18-19 வயதிருக்கும் பையனிடம் பணம் கேட்டார். அவன் சட்டைப்பையில் தேடி இல்லையென சொன்னதும், ‘பணம் இல்லைனாலும் பரவால வா...’ என்றபடியே அவனது உதட்டை கசக்கினார்.
அவன் அறுவறுப்படைந்த பாவனையில் உதட்டை துடைத்தான். இதற்கிடையே கையில் எடுத்த பணத்தை நான் கொடுக்க, அந்த பெண்ணும் சென்றுவிட்டார். அந்த சிறுவனுடனான அப்பெண்ணின் நடவடிக்கைக்கு பிறகும் நான் பணம் கொடுத்ததால் அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் வேறு இன்று ‘ஸ்லீவ்லெஸ் டாப்’ அணிந்திருந்ததனால் வண்டியில் ஏறியதிலிருந்தே அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தபடியே இருக்க, இதுவும் அதோடு சேர்ந்துக்கொண்டது.

நான் வண்டியிலிருந்து இறங்கும் வரையிலும் அச்சிறுவன் அவமானப்படுத்தப்பட்ட உணர்வில் கண்கள் கலங்க தன் உதடுகளை துடைத்துக் கொண்டே இருந்தான்.
மாற்றுப்பாலினத்தவரின் சமூகப் புறக்கணிப்பையும், உடலுறவு உரிமையையும் உணரும் அதே வேளையில் அச்சிறுவனின் உரிமை குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இன்று அவனுக்கு நடந்தது சந்தேகமேயின்றி பாலியல் துன்புறத்தல் தான். ஒருவர் எவ்வளவு ஒடுக்கப்பட்டவராக இருந்தாலும், விருப்பமில்லாத மற்றொருவரின் தனியுரிமையையும், உடலுரிமையையும் அத்துமீறுவது குற்றமே.
மாற்றுப்பாலித்தனவர்கள் குறித்த சமூக விழிப்புணர்வு மெல்ல விரிவடைந்துவரும் வேளையில், அவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மாற்றுப்பாலினத்தவரின் உரிமைப் போராட்டங்களை வலுவிழக்கச் செய்துவிடுமோ என அஞ்சுவதோடு, மாற்றுப்பாலினத்தவரை அரசியல்படுத்த வேண்டிய மிகையான தேவை இருப்பதையும் உணர்கிறேன்!

கருத்துகள் இல்லை: