வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஜெயலலிதாவின் கடைசி நாள் .... அத்தனை கனவுக்கும் பேக் அப் சொல்லி முடித்தார் .


Shalin Maria Lawrence :"கட் ,ஷாட் ஓகே " தெலுங்கு இயக்குனர் சொல்லி முடித்ததும் கற்பூரம் ஏற்றப்பட்டு குழுவுக்கு திருஷ்டி சுற்றி தேங்காய் உடைக்கப்பட்டது . இன்று ஒரு நடிகையாக ஜெயலலிதாவின் கடைசி நாள் .
ஜெயலலிதா இன்று தன் வழக்கமான பரந்த ஆனால் பல் தெரியாத புன்னகையுடன் ஸ்டுடியோவிலிருந்து விடை பெற்று கொண்டார் .
தன் வழக்கமான எட்டு வடிவிலான நடையோடு ,கண்ணில் வரும் கண்ணீரை இமையை விட்டு இறங்க விடாமல் ,பாரமான கண்களுடனே ஸ்டூடியோ வாசலில் உள்ள தன் காரை நோக்கி சென்றார் .
இனிமேல் அவரால் தலை குனிய முடியாது ,குனிந்தால் கண்ணீர் சிதறிவிடும் ,இனிமேல் தலை நிமிர்ந்தே இருக்கவேண்டும் ,பெரியவர் ஒருவர் சொன்னது நினைவில் வர தயார்படுத்தி கொண்டார் .
ஆரம்பத்தில் வெறுத்த சினிமா இன்று பிடித்த சினிமாவாகி போயிருந்தது .அத்தனை கனவுக்கும் பேக் அப் சொல்லி முடித்தார் .
ஜெயலலிதா மெல்ல தன் வீட்டுக்குள் செல்ல ,ஆள் அரவமேயற்று இருந்தது தோட்டம் .
இன்று ஜெயலலிதாவின் கடைசி நாள் .ஆக வேண்டிய காரியங்களை பார்க்க துவங்கினார் ஜெயலலிதா .

ஒப்பனை சாமான்களை எல்லாம் வீட்டு பணிப்பெண்ணின் மகளுக்காக ஒரு பெட்டியில் போட்டார் .நாளை முதல் அவர் வேறு ஒரு ஒப்பனை அணிய வேண்டி இருந்தது . அது அரசியல்வாதிகளுக்கே உரித்தான ஒரு ஒப்பனை .
அதில் முகப்பூச்சுக்கள் இருக்காது ,மனப்பூச்சுக்கள் இருக்கும் ,உதட்டிற்கு சாயம் இருக்காது ,சாயம் பூசிய வார்த்தைகள் இருக்கும் .
கண் மை தேவைப்படாது ,இனி தேவையெல்லாம் விரல்களில் மையே..
பிரோவை திறந்தார் ,யாரோ நினைவாக இருந்த சில சட்டைகளை அவசர அவசரமாக குப்பையிலிட்டார் . அவருக்கு புரிந்திருந்தது ,நாளையிலிருந்து அந்த வீட்டிலோ இல்லை அவர் வாழ்விலோ எந்த ஆணுக்கும் இடமில்லை என்பது .
வெளிர் நீலம் ,பேபி பிங்க்,லாவெண்டர் ,மஞ்சள் என்று தனக்கு பிடித்த ஜார்ஜெட் புடவைகளை ஆசையோடு ஒருமுறை தடவி பார்த்தார் ,கருப்பு சிவப்பு பார்டர் போட்ட அந்த புது வெள்ளை புடவைகளை அலமாரியில் அடுக்கினார் . இனி வெள்ளைதான் .ஜெயலலிதா நினைத்துக்கொண்டார் ......நினைத்துக்கொண்டார் .
இருந்த கொஞ்சம் நகைகளை போட்டுப்பார்த்தார் ,இனி வெளியில் அதிக நகைகள் தேவைப்படாது ,ஒரு செயின் ,இரண்டு கம்மல் ,ஒரு வளையல் போதும் ,ஒரு வாட்ச் போதும் நாளை முதல் . எண்ணிக்கொண்டார் ஜெயலலிதா .
வரும்வழியில் பெரிய சைஸ் குங்கும நிற ஸ்டிக்கர் பொட்டுக்களை வாங்கி வந்திருந்தார் .இனி அவருக்கு பிடித்த கலர் பொட்டுகள் வைக்க முடியாது .இனி அந்த நிறங்களுக்கு தோதாய் ஒற்றை மலர்களும் சூட முடியாது . கடைசியாக கண்ணாடியில் தன்னை ரசனையோடு பார்த்துக்கொண்டார் .
திரும்பவும் தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை ,யாரோ கட்டாயத்திற்காக மறுபடியும் செய்யா போகிறார் ஜெயலலிதா .
இன்றுவரை தன்னை ரசித்த ஆண்கள் ,நாளை முதல் தன்னை வெறுப்பார்கள் என்பதை தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் ஜெயலலிதா .
இனி அவருக்கு அந்தரங்கம் கிடையாது .அவர் வாழ்வே இனி ஒவ்வொரு நொடியும் மனோரஞ்சகமான காட்சியாக மாறும் என்பதை தெரிந்து வைத்திருந்தார் ஜெயலலிதா .
" ஓர் ஆலயம் ஆகும் மங்கை மனது " என்கிற சுமதி என் சுந்தரி பட பாடலை முணுமுணுத்துக்கொண்டே சூடாக ஒரு காபி போட்டு குடித்து தன் திருமணவாழ்வின் அத்தனை ஆசைகளையும் பதினைந்தே நிமிடங்களில் வாழ்ந்து முடித்தார் ஜெயலலிதா .
தன் தாயின் புகைப்படத்தை ஒருமுறை முத்தமிட்டபடியே முழுவது தனிமையிலிருந்த ஜெயலலிதா வாசலை வெறித்து பார்த்தார் .இனி தனக்கு தனிமை மட்டும்தான் என்று உறுதியாக நம்பினார் .அவருக்கு தெரிந்திருக்கவில்லை அவருக்கு கடைசிவரையில் தனிமை கிட்டாதென்று.
அந்த நகரத்தின் இன்னொரு மூலையில் ,ஏக்கங்களின் வசிப்பிடமாக மாறிய ஒரு இளம் பெண் தன் காலி அலமாரியை திறந்து வைத்துவிட்டு அதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார் .
இன்று ஜெயலலிதாவின் கடைசி நாள் .
ஷாலின்

கருத்துகள் இல்லை: