சனி, 2 செப்டம்பர், 2017

அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்..! எங்காவது கூலி வேலை செய்து வயிறு வளர்ப்பார்கள் ...

krishnavel.T.S  :  அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்
அரியலூரில், +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று மருத்துவ கனவு உடைந்து அனிதா தற்கொலை செய்து இந்த நாட்டுக்கு NEET ஏன் தேவையில்லை என்று சொல்லிவிட்டாள், என் சொந்த மகளை பறிகொடுத்த மனநிலையில் இருக்கிறேன்.
இந்த நாட்டில் நடக்கும் புரட்டு பார்பன உயர் சாதி அரசியலுக்கு இன்னும் எத்தனை அனிதாகளின் உயிர் தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.
இந்த கேவல அரசியலை, உற்றுநோக்கினால், எனக்கு ஒன்று தெரிந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகளில் NEET தேர்வு இருக்காது, IIT நுழைவு தேர்வான JEEE இருக்காது, இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் எந்த நுழைவு தேர்வும் இருக்காது என்றே தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது ஒன்று புரியவில்லையே, என புருவத்தை தூக்கவேண்டாம்.
நம் செல்ல மகள் அனிதாவின் மரணத்தின் துக்கத்தில், நாம் NEET-க்கு எதிராக ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க. இந்த பார்பன ஆதரவு அரசுகள், வேறு ஒரு நெடுங்கால கல்வி ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுகொண்டிருப்பது நம்மில் பலரின் கவனத்துக்கு வரவேயில்லை.

அந்த நாச வேலையின் முதல் படியே, அடுத்த வருடத்தில் இருந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் 10ஆம் வகுப்புவரையிலான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்தல்.
இனி அடுத்த வருடத்தில் இருந்து, 5 ஆம் வகுப்பு, 8ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகுகளுக்கும் இனி போது தேர்வு கட்டயாம் ஆக்கப்படும்.
இதற்கு காரணம் என்ன என்றால், அப்போது தான் உயர் வகுப்புகளுக்கு செல்லும் போது மாணவர்களின் தரமும் உயரும், மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கமுடியும் என்று ஒரு கேவலமான வாதம் முன்வைக்கப்படுகிறது.
நாமும் பார்ப்பனர்களின் இந்த உளறலுக்கு, ஆமாம் அப்போது தான் மாணவர்களின் கல்வி தரம் உயரும், பின்னாளில் NEET போன்ற தேர்வுகளில் போட்டிபோட திறமை இருக்கும் என்று ஆமாம் சாமி போட்டு கொண்டுயிருப்போம்.
இந்த NEET-இன் பின்புல பார்பன புரட்டை கண்டுகொள்ளவேண்டும் என்றால், வரலாற்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும்.
1. ஆதிகாலம் தொட்டு பார்பனர் மட்டுமே கல்வி கற்கலாம் என்று சொல்லி ஏமாற்றினர்,
2. பின்னர் நீதிக்கட்சியின் முயற்சிகளால் எல்லாதரப்பினரும் கல்வி கற்க தொடங்கினர்,
3. பின்னர் மருத்துவம் போன்ற உயர் கல்விகளில் சேர சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்றனர், பின்னர் அதுவும் முறியடிக்கப்பட்டது.
4. பின்னர் காமராசர் காலத்தில் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.
5. பின்னர் அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டது
6. பின்னர் மதிய உணவு, சத்துணவாக மாற்றப்பட்டது.
7. தற்போது, தமிழகத்தில் மட்டுமே, அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, உணவு, சீருடை, புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், காலுக்கு செருப்பு, மடி கணினி, என்று அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது
8. கடந்த வருடம் சுமார் 9 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள். அதில் விருதுநகர் மாவட்டத்தில் 97.85% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மொத்த தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 90% மேலே தான் இருக்கிறது.
1984-க்கு முன்னர் மருத்தவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு தேர்வு எப்படி நடந்ததது என்று, இன்றைய தலைமுறைக்கு தெரியாது.
அப்போதெல்லாம் விண்ணப்பித்த மாணவர்கள் ஒரு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அங்கே ஒரு சிறீனி மாமா உட்கார்ந்து கொண்டு, ஒரு மாணவனை பார்த்து அடேய் உனக்கு இதல்லாம் நோக்கு எதுக்குடா போய் B.com படி நல்ல பேங்கு வேலை கிடைக்கும், என்றும் இன்னொரு மாணவனை பார்த்து, அம்பி உனக்கு சீட் குடுக்கிறேன், நன்னா படிச்சி என் பேர காப்பாத்தனும் செரியா, ஆத்துக்கு போனதும் தோப்பானர மாமிய சாரிச்சென்னு சொல்லுடா, என்று தான் உயர் கல்விக்கு அட்மிஷன் கொடுத்துகொண்டிருந்தார்கள்.
1984-ல் தான் இதற்கு ஒருமுடிவு கட்டி, தமிழ்நாடு உயர்கல்வி நுழைவுத்தேர்வு என்று கொண்டுவந்தார்கள், அதை அண்ணா பல்கலைகழகம் தான் நடத்தியது. பின்னர் 2006-ல் இந்த தேர்வும் தேவையில்லை, மாணவர்கள் +2 தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையிலே ஒற்றை சாளர முறையில் அட்மிஷன், வழங்கப்பட்டது.
சிறீனி மாமாகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது தான் புழக்கடை வாயிலாக மத்திய அரசின் மூலம் இப்போது NEET மற்றும் 5, 8, 11ஆம் வகுப்புகளுக்கான கட்டாய போது தேர்வு முறை.
5, 8, 11ஆம் வகுப்புகளுக்கான கட்டாய போது தேர்வு வைப்பதற்கும் NEET-க்கும் என்ன தொடர்பு.
சென்ற வருடம் சுமார் 9 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதினார்கள், இந்த கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்வினால் போக போக இனி வருங்காலங்களில், இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இன்னும் 10 வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் கீழே போய்விடும்.
இது எப்படி நடக்கும் என்று மால் கலாச்சாரத்தில் சுற்றும், பார்பன கால் நக்கும் ஈனப்பிறவிகளுக் சத்தியமாக புரியாது, கீழ் வகுப்புகளில் இருந்தே கடுமையாக இருந்தால் கல்வி தரம் உயரத்தானே செய்யும் என்று முட்டாள்தனமாக உளறுவார்கள்.
உண்மையில் என்ன நடக்கும் என்றால், மாநிலத்தில் ஏதோ கிராமத்தில் உள்ள ஒரு வறுமையான குடும்பத்தை உதாரணமாக இரண்டு சூழ்நிலைகளில் வைத்து பார்ப்போம்
சூழ்நிலை – 1
காலை 5 மணிக்கு அந்த குடும்பத்தின் தாயும் தந்தையும், எங்காவது கூலிவேலை தேடி சென்று விடுவார்கள், அந்த வீட்டில் உள்ள குழந்தை, உண்ண ஏதாவது இருந்தால் எடுத்து உண்ணும், அதுவும் இல்லை என்றால், தன் பள்ளி சீருடையை எடுத்து அணிந்து கொண்டு, புத்தகப்பையை, எடுத்துக்கொண்டு, நேராக பள்ளிக்கு செல்லும், மதிய உணவை கண்டதும் மனம் மகிழும், நடுவே முடிந்தால் ஏதோ புரிந்தவரை படிக்கும், இப்படியே காலங்கள் செல்ல, சுமார் 13 வயதுக்கு மேலே தான், நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம், இந்த நிலையில் இருந்து விடுதலை கிடையாதா என்று சிந்திக்க தொடங்கும், அதே ஊரில் வேறு பெரிய நகரில் பணிபுரியும் ஒரு அண்ணனையோ ஒரு அக்காளையோ அவர்கள் விடுமுறைக்கு வரும் போது பார்த்து, இறுதியாக படிப்பு தான் நமக்கு இந்த நிலையில் இருந்து விடுதலை கொடுக்கும் என்று அந்த குழந்தைக்கு புரியும், பின்னர் உயிரை கொடுத்து படிக்கும். அதனால் தான் கடந்த ஆண்டில் கூட +2 தேர்வில் தமிழக மாணவர்கள் 90%-துக்கு மேலாக தேர்ச்சி பெற்றார்கள். பின்னர் எப்படியோ ஒரு மேல் படிப்பு படித்து, கூலிவேலை செய்யும் குடும்பம் என்ற நிலை அந்த குழந்தையால் ஒரு நாள் மாறும்
சூழ்நிலை – 2
இந்த குழந்தை 10 வயதில் அதாவது 5ஆம் வகுப்பில் அல்லது 13 வயதில் அதாவது 8ஆம் வகுப்பில் தோல்வி என்று ஆக்கப்பட்டால். என்ன நடக்கும். அந்த குழந்தை அடுத்த வருடத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல முடியாது. அடுத்த வருடம் தனி தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த பின்னர் தான் 6ஆம் அல்லது 9-ஆம் வகுப்புக்கே போக முடியும். அதற்கு அந்த குடும்பத்தின் வறுமை இடம் தராது, 10 வயது குழந்தையை டுடோரியல் கல்லூரியில் ஒரு கூலி வேலை செய்யும் தகப்பனால் எப்படி அனுப்ப முடியும்
கல்வி அறிவு இல்லதாத பெற்றோருக்கு பிறந்த ஒரு 10 வயது குழந்தைக்கு கல்வியின் முக்கியம் எப்படி புரியும், அதற்கு புரியும் வயது வரும் போது, அந்த குழந்தைக்கும் பள்ளிக்குமான தூரம் மிக அதிகமாகிவிடும்.
11 வயதில் அந்த குழந்தை தனியாக வீட்டில் விடப்படும், ஒருசில வாரங்களில் அந்த குழந்தையும் ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்படும்.
5, 8, 11ஆம் வகுப்புகளுக்கான கட்டாய போது தேர்வு வைக்கப்படும் போது சுமார் 10 வருடங்களில் +2 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
கிராமங்களில் பார்பானுக்கும் உயர் சாதியினருக்கும் குறைந்த செலவில் கூலி வேலைக்கு நிறைய ஆட்கள் கிடைப்பார்கள்.
நகரங்களில் குறைந்த செலவில் வீட்டு வேலைக்கு பெண்களும், தொழில் முதலைகளுக்கு குறைந்த செலவில் Unskilled Labourers கிடைப்பார்கள்.
அப்போது NEET, JEEE போன்ற எல்லா தேர்வுகளையும் நீக்கிவிடுவார்கள், சிரினி மாமாக்கள் கௌசி மாமிகளுடன் உல்லாசமாக இருப்பார்கள்.
நாமும் பத்து ஆண்டு போராட்டத்தில் NEET, JEEE போன்ற எல்லா தேர்வுகளையும் நீக்கிவிட்டோம் என்று காலரை தூக்கிவிட்டு கொண்டு சரவணபவனில் நண்பர்களுடன் காப்பி ஷாப்பிட்டு கொண்டாடுவோம்.
அப்போது அனிதா போன்ற என் பிள்ளைகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லாத பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம். +2 வரை படித்தால் தானே மருத்துவ படிப்பு என்று கனவு காண வேண்டும், பின் சாக வேண்டும்
இந்த நேரத்தில் நமது உண்மையான முன்னெடுப்பு NEET மற்றும் பிற தேர்வுகள் மட்டுமல்ல.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தலையிடலாம் என்ற நிலையில் இருக்கும் கல்வித்துறையை இந்திய அரசியலமைப்பின் Con-Current List எனப்படும் பட்டியலில் இருந்து நீக்கி State List-க்கு கொண்டுவருவதற்கு போராட வேண்டும் அப்போது தான் நம் பிள்ளைகள் எப்படி படிக்க வேண்டும் என்று நாம் நமது மாநிலத்தில் முடிவு செய்ய முடியும்.
இல்லை என்றால் நிச்சயம் இன்னும் 10 ஆண்டுகளில் என் பிள்ளைகள் பலர் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் எங்காவது கூலி வேலை செய்து வயிறு வளர்ப்பார்கள் என்பது தான் நிச்சயம்.

கருத்துகள் இல்லை: