வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மாணவி அனிதா தற்கொலை .... " நீட்" .. மத்திய மாநில அரசுகளின் பச்சை படுகொலை! பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர்

அரியலூர்: மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அனிதாவின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5 ஆகும். ஆனால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வில் அவர் 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் அவரது மருத்துவராகும் ஆசை நிராசையானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த மாணவி அனிதா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா,
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடைசி வரை போராடியும் நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. தமிழக அரசின் பொறுப்பின்மையும், மத்திய அரசு முதலில் ஓராண்டு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க தயார் என கூறி பின் அந்தர் பல்டி அடித்து, தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின்
மருத்துவராகும் கனவை சிதைத்து விட்டது.
இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து சட்ட ரீதியாக போராடிய மாணவி அனிதா, மருத்துவராகும் கனவு நிறைவேறாது என தெரிந்து விட்டதால், அரியலூர் செந்துறை அருகே குழுமூரில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனிதாவின் உடல:


உடற்கூராய்வுக்காக மாணவி அனிதா உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரியலூர் அரசு மருத்தவமனையில் வைத்து மாணவி அனிதா உடல் பரிசோதனை நடக்க உள்ளது.


விபரீத முடிவு வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்நீட் தேர்வில் தோல்வியுற்றதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்ததையடுத்து மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனிதா தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி:

மாணவி அனிதா தற்கொலை மிகுந்த வேதனை, அதிர்ச்சி அளிக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்தது என அவர் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அனிதாவின் குடும்பத்துக்கு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என விஜபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அனிதா தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பு : ஸ்டாலின்

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளத வேதனை அளிக்கிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். அனிதாவின் மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பா.ம.க வேதனை:

தலைசிறந்த மருத்துவராக வரவேண்டிய மாணவியை நாம் இழந்துள்ளது வேதனை அளிப்பதாக பாலு கூறியுள்ளார். மாணவி அனிதா தற்கொலை குறித்து பாமகவை சேர்ந்த பாலு கருத்து தெரிவித்துள்ளார். மனமுதிர்ச்சி பெற்றவர்களால் கூட இந்த ஏமாற்றத்தை தாங்கியிருக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது : கி.வீரமணி

மாணவ சமுதாயம் தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். மாணவி அனிதா தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது ஒரு நாள் போராட்டம் அல்ல, வெற்றி பெறும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

பலருக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அனிதா : எம்.பி. கனிமொழி

பல மாணவர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் மாணவி அனிதா என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் படிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறியுள்ளார். நீட் தேர்வில் மாற்று வழி என்ன என்பதை தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்  தினகரன்

கருத்துகள் இல்லை: