சனி, 2 செப்டம்பர், 2017

மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”.. ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை:
நிகழ்ந்தது மரணம் அல்ல மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை. அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து உயர் மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று சட்டப் போராட்டங்களை நடத்தி, தீர்வு கிடைக்காத காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவிய மாணவி அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருக்கும் தந்தைபடும் துயரம், இத் தலைமுறையோடு போகட்டும் என, 12 ஆம் வகுப்பில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, படித்து 1,176 மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் கனவுகளோடு காத்திருந்த அரியலூர் மாணவி அனிதாவை, மார்ச்சுவரிக்குள் தள்ளி இருக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

தலைமுறை தலைமுறையாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், குறிப்பாக பெண்கள் எவரும் கல்வி கற்க கூடாது என கட்டளைகளை விதித்த பார்ப்பன மதம், பார்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற விதியை ஏற்படுத்தி வைத்திருந்த மனுநீதியின் அநீதியை எதிர்த்து, புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் போராடிப் பெற்ற உரிமையான சமூகநீதிக் கோட்படிலான இட ஒதுக்கீட்டைத் தகர்க்கும் நோக்கில் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதியை சவக்குழிக்குள் தள்ளி மாணவி அனிதாவின் உயிரைப் பறித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாடு முழுதும் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு. இதைத் தட்டிக் கேட்டு தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய எடப்பாடி அரசோ, தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ச.க வின் கைப்பாவை அரசாகவே மாறி, வாக்களித்த தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துவருகிறது.
மத்திய பாடத்திட்டத்தின் மூலம் பயின்ற மாணவ மாணவியர் மட்டுமே இனி மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி, ஏழை எளிய, கிராப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை தவிடு பொடியாக்கி, மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாது, பல மாணவ மாணவியரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி தனது பயங்கரவாத செயலை அரங்கேற்றி வருவது கண்டனத்துக்குறியது. மாணவி அனிதாவின் உயிரிழப்பு ஒட்டு மொத்த மாணவ மாணவியரின் உணர்வின் வெளிப்பாடே ஆகும். எனவே மாணவி அனிதாவின் மரணத்திற்கு பிறகாவது தமிழக அரசு, மத்திய மோடி அரசிற்கு அழுத்தம் கொடுத்து நீட் நுழைவுத் தேர்விற்கு நிரந்தர தடை கோர வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்துவதோடு, மாணவியை இழந்து வாடும் பெற்றோருக்கு உரிய நீதியை வழங்கிட வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்துகிறது.  மு,வி,நந்தினி   thetimestamil

கருத்துகள் இல்லை: