செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”:

துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன் ஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ‘துரத்தப்படும் மனிதர்கள்’ என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் நீதிமுறைமை பற்றி யதார்த்தமாக பேசுகிறார். டைம்ஸ் தமிழுக்காக உரையாடியவர் : பீட்டர் துரைராஜ்.
ம.இராதாகிருஷ்ணன்
கேள்வி: நீங்கள்  எழுதிய “துரத்தப்படும் மனிதர்கள் ” நூலின் பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் ?
பதில்: தமிழ்நாடு ஒட்டர் – குறவர் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 2010 ல் எழுதிய நூல் இது. ஹென்றி திபேன் அணிந்துரை எழுதியிருந்தார்; மக்கள் கண்காணிப்பகம் இதனை வெளியிட்டது. கல் ஒட்டர், ஒட்டர், குறவர் ,மலைக் குறவர் பற்றி இதில் எழுதியிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை , விழுமியங்கள் , சந்திக்கும் இன்னல்கள் பற்றி எழுதி இருக்கிறேன். பொய் வழக்கிற்கான ‘ரிசர்வ் போர்ஸ் ‘ ஆக இவர்களை காவல்துறை எப்படி வைத்திருக்கிறது என்பதை எழுதியுள்ளேன்.

களத்தில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்கள் இதனை அதிகம் வாசித்தார்கள். சிறந்த ஆய்வு நூலுக்கான விருதை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இதற்கு வழங்கியது. குற்றப் பரம்பரைச் சட்டத்தின் நீட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்  அவசியம் படிக்க வேண்டிய நாட்களில் இது ஒன்று  என்று பேராசியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியதை பெருமையாக கருதுகிறேன்.
கேள்வி: குற்றப் பரம்பரையினர் சட்டம் என்ன சொல்கிறது?
பதில்: இதனை ரேகைச் சட்டம் என்றும் சொல்லுவார்கள் .குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த ஒட்டுமொத்த மக்களையே திருடர்கள் என  இந்த சட்டம் சொன்னது. அந்த சாதியைச் சார்ந்த ஆண்கள் அனைவரும் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் ரேகை வைக்க வேண்டும். இரவு வெளியில் தங்க முடியாது. சாவு, கல்யாணத்திற்கு கூட வெளியே போக முடியாது. அப்படி போக வேண்டுமென்றால் கடவுச்சீட்டு வாங்கித்தான் போகமுடியும். 1871 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதனை நீக்க கோரி  இந்தியாவில் காங்கிரஸ் சோசலிஸ்டுகள், நேரு போன்றோர் போராடினர். தமிழ் நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோர் போராடினர். தமிழ் நாட்டில் 1947 லும் இந்தியா முழுவதும் 1952 லும் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.
தமிழ் நாட்டில் 68 சாதி பிரிவினர் சீர் மரபினராகவும் ஏனையோர் மற்ற பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாடோடிகளாக இருப்போரை  பேராசிரியர் தனஞ்செயன்தான் முதலில் அலைகுடி என அழைத்தார்.  (நிலைகுடிக்கு எதிர்பதம்). நாடோடியின் சமகாலப் பெயர்தான் அலைகுடி. எல்லா சீர்மரபினரும்  அலைகுடிகள் அல்ல.
இந்தியா முழுவதும் 11 கோடி பேர் இருப்பதாக தேசிய சீர்மரபு , நாடோடி, அரை நாடோடி, பழங்குடி ஆணைய அறிக்கை  (Denotified, nomadic, semi-nomadic tribes commission 2008) சொன்னது. காவல்துறை பயிற்சியிலேயே kurava crimes என்று வைத்து இருக்கிறார்கள். இப்படி பயிற்சி எடுத்த அதிகாரிகள் எந்த மனோபாவத்தில் இருப்பார்கள்?
ஆனால் அலைகுடி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆனால் பிறவியிலேயே திருடர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
கேள்வி: நீங்கள் கைத்தறி தொழில் செய்தவர், இவர்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது?
பதில்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற் சங்க தலைவர் சுந்தர் ராஜன் தான் என்னை இப் பணியில் ஈடுபடுத்தியவர். மதுரை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒத்துழைப்பு கொடுத்தது. யாரும் செய்ய விரும்பாத வேலை; செய்ய துணியாத வேலை. தமிழ்நாடு ஒட்டர் குறவர் வாழ்வுரிமை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டேன். மதுரை சோகோ அறக்கட்டளை மகபூப் பாஷா, வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் சங்கம் உருவாவதில்  உதவி புரிந்தனர். அலைகுடி  மக்கள் நலச் சங்கம்  என்ற பெயரில் இப்போது அது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே  பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார்.
கல் ஒட்டர் சாதிகளைச் சார்ந்தவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் அடையாளத்தை காட்டாமல் கைது செய்வதும், அவர்களை நாட்கணக்கில் நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தாமலேயே, சித்திரவதை முகாம்களில் வைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறையில் அடைப்பதும் வழக்கம். பலர் இதில் அப்பாவிகள்.
தமிழ்நாட்டில் பேராசிரியர்கள் பக்தவச்சல பாரதி, தனஞ்செயன் ஆகியோர் நாடோடோடிகள்  இனவரைவியல்  குறித்து நிறைய எழுதி உள்ளனர். விடியல் பதிப்பகம் மகாராஷ்டிராவைச் சார்ந்த லெட்சுமண் கெய்க்வாட் எழுதிய உச்சாலியா என்ற (உச்சாலியா என்பது இனக்குழுவின் (சாதி பெயர்) தன் வரலாற்று நூலை வெளியிட்டுள்ளது. இதற்கு சாகித்திய அகாதமி விருதும் கிடைத்துள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே  பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார். மும்பையைச் சார்ந்த திலிப் டிசௌசா எழுதிய ” குற்ற முத்திரை ” நூலும் முக்கியமானது. 1950 ல் அந்ரோல்கர்  ஆணையத்தின் அறிக்கை ஒரு முக்கியமான ஆவணமாகும்.
கே : நீங்கள் காவல்துறை குறித்து மிகவும் எதிர் மறையான கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள் ?
பதில்: எனக்கு நம் நாட்டின் குற்ற நீதிமுறைமை ( criminal judicial system ) மீது சுத்தமாக மரியாதை கிடையாது. நிச்சயமாக அது ” சமூக அநீதிக் கொள்கையை ” கடைபிடிக்கிறது. விசாரணை கைதிகளாக ஆண்டுக் கணக்கில் சிறையில் இருப்போரின் சாதி , மதம் சார்ந்த சார்ந்த விகிதாச்சாரத்தை கணக்குப் பாருங்கள். உங்களுக்கே அது தெரியும்.  மீண்டும் மீண்டும் கைது செய்யப் படுபவர்களின் அகில இந்திய சராசரி 5 சதவிகிதம். தமிழ் நாட்டில் இது 19.5 சதவீதம்.
நகையை திருடு கொடுத்த யாருக்காவது அவர்களுடைய சொந்த நகை கிடைத்து இருக்கிறதா? அப்படியானால் என் நகையை எடுத்த உண்மையான குற்றவாளி எங்கே? இந்த நகை  எங்கே இருந்து எடுக்கப்பட்டது? நேர்மையான அதிகாரி என்று எல்லா பத்திரிக்கையாளர்களாலும் புகழப் பட்ட ஒரு காவல் அதிகாரி இருந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரிடம் யாரும்  அவருக்கு கீழ் பணி புரிபவர்கள் திருமண பத்திரிகை கொடுத்தால் 5 பவுன், 10 டவுன் என விருப்பம் போல கொடுக்கச் செய்வார்.
திருட்டை கண்டு பிடிக்கும் சதவீதம் தமிழ்நாட்டில் அதிகம் என்கிறார்கள். அப்படியானால் திருட்டு ஏன் குறையவில்லை. மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக அஸ்ரா கர்க் என்ற அதிகாரி இருந்தார். பொய் வழக்கு போட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவர் பொறுப்பில் இருக்கும் போது குற்றத்தை கண்டுபிடிக்கும் சதவீதம் குறைவாக இருந்தது. இது ஒரு குறையாக இருந்தது என்றார்கள்.
காவல்துறை சொல்லுவதை அப்படியே ஊடகங்கள் எழுதுகின்றன. பாதிக்கப்பட்டவன் சொல்லுவதை எழுதுவதில்லை. ஆனால் பொது மக்களாகிய நாம் ஏதும் சொன்னால் காவல்துறையிடம் கேட்க வேண்டும் என்பார்கள். காவல் துறையை நவீன படுத்துவது என்றால் ஆயுதங்கள், வாகனங்கள் வாங்குவது இல்லை; திறமையான, விஞ்ஞான பூர்வமான விசாரணையை நடத்துவதுதான்.
குற்றப் பரம்பரையினர் சட்டம் அமலில் இருக்கும் போதே வழக்கமாக சட்டத்தை மீறுவோர் சட்டம் (Habitual Offenders Restrictions​  Act – HORA) கொண்டு வந்தார்கள். பின்பு குண்டர் சட்டம் கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் ரேகைச் சட்டத்தின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
கே: அரசியல் கட்சிகள் இதுபற்றியெல்லாம் பேசுவது இல்லையா ?
பதில்: குறவரில் 27 பிரிவு ( சாதி) குற்றப் பழங்குடியினர் பிரிவில் உள்ளன. நான் மதுரை, தேனி மாவட்டங்களில் பணிபுரிந்த போது அலைகுடி மக்கள் சங்கம் உருவானது.
மார்க்சிஸ்ட் கட்சி, குறவர் பழங்குடி அமைப்பு என  வட மாவட்டங்களில் வைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குறவர் பழங்குடி அமைப்பு வைத்துள்ளது. அந்தந்த தல மட்டங்களில் கட்சி உறுப்பினர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த கட்சியின் கொள்கையாக இது மாறவில்லை. மற்ற கட்சிகளைப் பற்றி பேசவே வேண்டாம். காஞ்சிபுரம் , விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இவர்களைப்பற்றி யாருமே பேசுவதில்லை.
வழக்கறிஞர்கள் “திருட்டு கேசுல நான் ஆஜராவதில்லை” என்று பெருமையாக சொல்லுவார்கள். “இந்த கேசுக்கு எல்லாம் நீங்க வரலாமா சார்?”  என்று காவல்துறையினரே  சொல்லுவார்கள். இப்படித்தான் இவர்களை தனிமைப்படுத்தும் வேலை நடக்கிறது; பொதுப் புத்தி கட்டமைக்கப்படுகிறது. கல் ஒட்டர் சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை விரும்புவதில்லை. ஏனெனில் அவர்கள் காவல்துறையினரின் வேட்டைப் பொருளாவர்.
கேள்வி : அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஒண்ணும் செய்ய வேண்டாம்.சட்டப்படி விசாரணை, கைது, வழக்கு நடத்தினாலே போதும். இவர்கள் ” குற்றவாளிகள் ” என்று இலக்கு நிர்ணயம் செய்துவிட்டு விசாரணை நடத்தக் கூடாது. விசாரணைக்கு சம்மன் கொடுங்கள்; கைது செய்தால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு, கல்வி போன்ற உரிமைகளைத் தந்தால் போதும். வாக்குரிமை இல்லாததால் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை.
கேள்வி: சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டில் எதுவுமே நடக்கவில்லையா?
பதில்: இந்திய அளவில் அவர்களை Denotified Tribe என்கிறார்கள். ஆனால் தமிழில் சீர்மரபினர் என்று மொழி பெயர்க்கின்றனர். அதாவது ஏற்கெனவே கெட்டவர்கள் என்ற பொருள் அதிலே தொக்கி இருக்கிறது DNT எனில் SC க்கு சமம். DNC_ MBC க்கு சமம் என்று தமிழ்நாட்டில் உள்ளது.
சமூக நீதி பேசும் மாநிலம் DNT யை DNC யாக கொண்டுள்ளதுதான் சமூக அநீதி. எனவே சலுகைகள் தமிழ்நாட்டில் குறைவு.
கேள்வி: ஆராயா தீர்ப்பு – என்ற ஆவணப் படம் வந்ததாக சொல்லுகிறார்களே?
பதில்: அரசு அதிகாரியாக இருக்கும் இளங்கோவன் கீதா இந்த நாடோடி , அரை நாடோடி மக்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராயா தீர்ப்பு என்ற 30 நிமிட ஆவணப்படம் எடுத்தார். இதில் குத்சியா காந்தி IAS கூட பேசியுள்ளார். நல்ல படம். பல இடங்களில் திரையிடப்பட்டது. ஆனால் இவர் எடுத்த மாதவிடாய் என்ற  படம் பேசப்பட்ட அளவுக்கு, திரையிடப்பட்ட அளவுக்கு இது பேசப்படவில்லை .
கேள்வி: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இறுதியாக ஏதாவது சொல்லுங்களேன்.
பதில்: நான் இப்போது சென்னையில் ஏஐடியுசி தொழிற் சங்க செயலாளராக இருக்கிறேன்; தொழிற் சங்க செய்தி ஆசிரியர் குழுவில்  இருக்கிறேன். மனைவி காமாட்சி. நான் கம்யூனிஸ்டு கட்சியின் முழு நேர ஊழியன். அலைகுடி மக்களுக்காக வேலை செய்ததில் எனக்கு மன நிறைவு இருக்கிறது. thetimestamil

கருத்துகள் இல்லை: