செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

12 வயது பெண் குழந்தை தற்கொலை .. மாதவிடாய் உதிரப்போக்கை .. திட்டிய ஆசிரியர் ... மனமுடைந்த ..

Geetha Narayanan :பாளையங்கோட்டையில் ஒரு 12 வயது பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டு விட்டது.காரணம் மாத விடாய் உதிரப் போக்கு அதிகமாக ஆகி யூனிபார்ம் நனைந்து பெஞ்சிலும் கொட்டி விட்டது.அதற்காக ஆசிரியை திட்டியிருக்கிறார்.மனமுடைந்த குழந்தை மாடியிலிருந்து குதித்து உயிரை விட்டு விட்டது.இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து மனம் ரொம்பவே வேதனைப் படுகிறது.
இந்த மாத விடாய் அதிக உதிரப் போக்கைப் பற்றி மேற் கொண்டு பேசப் போகிறேன்.அய்யோ கண்றாவி,அருவருப்பு என நினைக்கிறவர்கள் இங்கே நிறுத்திக் கொண்டு விலகி விடுங்கள்.
ஒரு பெண்ணைப் போல் மற்றொரு பெண்ணிற்கு biological make up,harmonal make up இருக்காது.11 வயதிலிருந்து அதிக உதிரப் போக்கிற்கு உள்ளாகும் பிள்ளைகள் உண்டு.மாத விடாய் நேரத்தில் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் உழைத்தாலும் உதிரம் கொட்டித் தீர்க்கும்.இன்றைய செயற்கை உணவு எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டியையும்,நார்க்கட்டியையும்( cysts,fibroid) கொடுத்து விடுகிறது.இச்சிக்கல்களால் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும்.நடுத்தர வயது அடைந்த அனேகப் பெணகள் பெரும் உதிரப் போக்கோடு போராட வேண்டியிருக்கும்இந்த அதிக ரத்தப் போக்கால் ரத்த சோகை ஏற்பட்டு அன்றாட உழைப்பைக் கொடுக்கவே சிரமமாக இருக்கும்.

ரொம்ப முக்கியமாக இந்தப் பள்ளி யூனிபார்ம் ஸ்கர்ட்களை ஏன் லைட் கலரில் வைக்க வேண்டும் எனத் தெரியவில்லை.அதற்கு அர்சுப் பள்ளிகளின் மெரூன் கலர் ரொம்பத் தேவலை.
அப்புறம் ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம் என்று ஒரு தூய வெள்ளையை வைப்பார்கள் அந்தச் சிரமத்தை வர்ணிக்கவே முடியாது.
பள்ளிகளில் மட்டுமல்ல கழிவறை அவசியம் எங்கெங்கும் உண்டு.அதுவும் ஒரு குப்பைத் தொட்டியோடு.எல்லா அலுவலகங்களிலும் ,பள்ளிகளிலும் மாத விடாய் நேப்கின்களை எரிக்கிற incinerator வேண்டும்.பல சிறு அலுவலகங்களில் ஒரு ஃப்ளோருக்கு ஒரு கழிவறை இருக்கும்.ஒருங்கிணைக்கப் படாத துறையில் இருக்கும் பெண்களுக்கு அதுவும் இல்லை.இதற்கு சட்டம் இருக்கிறது.நடை முறையில் ஒன்றும் இல்லை.
அப்போது என் மகனுக்கு ஆறு வயது இருக்கும்.(இப்போது 19)ஆங்கிலத் தேர்வில் ஒரு பொதுக் கேள்வி அம்மாவிற்கு செய்த உதவியை எழுதுக.என் மகன் எழுதிய பதில் இது.'என் அம்மாவிற்கு மாத விடாய் உதிர போக்கு மிக அதிகமாய் இருந்தது.நனைந்த அவர் ஆடையை சோப்பும் டெட்டாலும் போட்டு ஊற வைத்தேன். க்ளுகோஸ் கலந்து கொடுத்தேன.அவருக்குக் காலைப் பிடித்து விட்டேன்."இன்னும் இரண்டு,மூன்று வரி எழுதியிருந்தான். ஆசிரியை அவனுக்கு ஐந்து மதிப்பெண் கொடுத்திருந்தார்.பின்னர் அந்த ஆசிரியை கொஞ்சம் உணர்வு வயப் ப்ட்டவராய் இதெல்லாம் குழந்தையிடம் சொல்வீர்களா என்று கேட்டார்.சொல்லித்தான் ஆக வேண்டும் என்றேன்.குழந்தைகள் இந்தப் புரிதலோடுதான் வளர வேண்டும்.அவன் வேறு எதுவும் செய்கிறானோ இல்லையோ சக உயிரின் வேதனையைப் புரிந்து கொள்வது அவசியம்.
யோசித்துப் பார்த்தால் படிப்பு,உழைப்பு,சாதனைகள்,சோதனைகள்,பயணங்கள்,விருந்தினர் உபசரிப்பு,ஆய்வுப் பணிகள்,நிர்வாகப் பணிகள், பேப்பர் பிரசெண்டேசன்கள் ,நடத்திய பயிற்சிகள்,பங்கு பெற்ற போரா ட்ட்ங்கள் ,அன்றாட சமையல்,வீட்டு வேலை எல்லாம் இந்தப் பிரச்சினையோடுதான்.அதுதான் sexual reproductive health பற்றிய மாநிலம் தழுவிய திட்டங்களில் ,தேசிய கொள்கை பரிந்துரைகளிலும் என்னை பணியாற்ற வைத்தது.
பெண்களின் உழைப்பு வேண்டுமெனில் அதற்குரிய வசதிகளைச் செய்து தரத்தான் வேண்டும்.ஏனெனில் அது உரிமை. சலுகை அல்ல

கருத்துகள் இல்லை: