சனி, 31 டிசம்பர், 2016

பணமதிப்பிழப்பு எதிர்ப்பு மாநாடு! விடுதலைச் சிறுத்தைகள் .. இந்தியாவிலேயே முதல்முதலாக நடத்திய திருமாவளவன்

புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 50 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மக்களின் துயரங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன. மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசோ இதுவரை 68 நிபந்தனைகளை மக்கள் மீது திணித்து வருகிறது. இதற்கு எதிராக தேசியக் கட்சிகளே ஒன்று சேர முடியாமல் திணறி வரும் நிலையில், இந்தியாவிலேயே முதன் முதலாக மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநாடு நடத்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அந்த மாநாட்டு கவரேஜ்.
தமிழக அரசியலில் பெரும் கட்சிகளை அதிரவைத்த மக்கள் நலக் கூட்டணி, மெகா கூட்டணியாக காணப்பட்டது. விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஐஎம், தமாகா, தேமுதிக, என சேர்ந்து, “மக்கள் நலக் கூட்டணியில் கடைசியாக சேர்ந்த தமாகா, முதலில் வெளியேறியது, அடுத்தபடியாக தேமுதிக, வெளியேறியது, கடைசியாக மதிமுக வெளியேறிய நிலையில், எஞ்சிய விசிக, சிபிஐஎம், சிபிஐ, மட்டுமே உறுதியுடன், கொள்கையில் தளராமல், ரூ 500, 1000, நோட்டுகள் செல்லாது’ என்ற பெயரில் பாஜக அரசு இந்திய நாட்டு மக்கள் மீது திணித்திருக்கும்’ பொருளாதார அவசரநிலை’யைக் கண்டித்து, புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு, 2016 டிசம்பர் 28-ஆம் தேதி அன்று நடைபெற்றது.

மாநாடு நிகழ்ச்சி துவக்கமாக, மக்கள் இசை நிகழ்ச்சி நடத்திய புதுவை சித்தன் ஜெயமூர்த்தி ஒரு பாடலை பாடினார், அந்த பாடல் வரிகளை மேடையில் இருந்த தலைவர்கள் ரசித்துக் கேட்டனர். கூடியிருந்த தொண்டர்களோ மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். பல இடங்களில் போலிஸ்களுக்கும், மாநாட்டுக்கு வந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தலைவர்கள் உள்ள மேடையிலே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திருமாவே தடி எடுத்துக்கொண்டு கட்டுபடுத்தும் அளவுக்கு மோசமாக இருந்தது நிலமை,அதன் பின்னர் திருமா பேசுகையில், டிசம்பர் 28 ஆம் தேதியோடு மோடி சொன்ன ஐம்பது நாள் கெடு இன்று முடிகிறது, அவர் வாக்குறுதி அளித்ததுபோல இந்தியாவில் கள்ளப் பணமும், கருப்புப் பணமும் ஒழிந்துவிட்டதா என்று நான் மட்டும் கேட்கவில்லை, இந்திய நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
சுவிஸ் நாட்டு வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 1400 பேர்களின் பட்டியலைத் தருவதற்குத் தயாராக இருக்கு என்று அந்த அரசு அறிவித்தபோதிலும், அதை வாங்குவதற்கு இதுவரையில் முயற்சி செய்யவில்லை, சுவிஸ் நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி, வங்கியில் 25420 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளை இந்தியர்கள் 1195 பேர் பட்டியலை கடந்த ஆண்டில் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டது, இதுவரையில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களை கைது செய்யவில்லை,
பனாமா நாட்டில், மொஸாக் பொன்சேகா என்ற நிறுவனத்தின் மூலம், பல நாடுகளில் போலி கம்பெனிகளைத் துவக்கி, மோடியின் நெருங்கிய நண்பர் வினோத், அதானி, மற்றும் அமிதாபச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற, 37 ஆயிரம் இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஊடகத்தில் செய்தி வந்துள்ளது, அவர்களை கைது செய்யபட்டதா, அல்லது அந்த கருப்புப் பணத்தை பறிமுதல் செய்யபட்டதா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை . மோடியின் பொருளாதாரக் கொள்கைதான், அண்ணன் வைகோவுடன் இருந்த நமது நட்பை சிதைத்துவிட்டது என்று பேசியபோது மேடையில் இருந்த தோழர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணனும் சிரித்தார்கள்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, இந்தியாவில் இதுவரை எந்த சட்டம் நம்மைப் பாதுகாத்து வந்ததோ, அந்தச் சட்டத்துக்கே இன்று பாதுக்காப்பு இல்லை. மோடி, தான் அறிவித்த புரட்சிகரமானத் திட்டங்களைப் பற்றி லண்டனிலும், தொலைக்காட்சிகளிலும் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் இவரது புரட்சிகர அறிவிப்பைப் பற்றி விவாதிக்க அழைத்தாலும் வரமறுக்கிறார் என்றார்.
சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன்பேசுகையில், மக்கள் படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் கண்டு, மோடியை கடுமையாகத் தாக்கி பேசினார். நவம்பர் எட்டாம் தேதி மோடி அறிவிப்பை தொடக்கத்தில் ஆதரித்த இயக்கங்கள் பிறகு பின்வாங்கின, ஆனால் அன்று முதல் இன்றுவரையில், மோடி அறிவிப்பில், எதிர்ப்பில் உறுதியாக இருந்தது, இடதுசாரிகளும், விசிக-வும்,தான், வங்கியில் வரிசையில் நிற்பது அம்பானியும், அதானியும் அல்ல, சாதாரண மக்கள்தான் 90% பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், கருப்புப் பணத்தை ஒழிக்க, ரூபாய் நோட்டுகளைத் தடை செய்வது தீர்வாகாது என்று பல வல்லுநர்கள் கூறுவதாக தெரிவித்தார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: