வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

துரைமுருகன் :அந்தம்மா போர்டிகோ கிட்ட வர்றப்போ சபை கப்சிப்னு ஆயிடும். சபாநாயகர் உட்பட அத்தனை பேரும் எந்திரிச்சு நிக்க

"ஒருநாள் கலைஞர்,  குழந்தைகள் மது அருந்தும் வீடியோவை பார்த்துக் குலுங்கி அழுதார். அப்போது என்னிடம், ' யார் செய்திருந்தாலும், நாமே செய்திருந்தாலும் இனி நம் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்க கூடாது. என் மனம் தாங்கவில்லை'  என சொல்லி அழுதார். மறுநாள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். என அறிவித்தார்," என திமுகவின் மதுவிலக்கு அறிவிப்பின் பின்னணியை விளக்கியுள்ளார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்.


இன்னும் யாருடன் கூட்டணி என்பது முடிவாகவில்லை. தேர்தல் வியூகத்தை வகுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது திமுக. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகன், துரைமுருகன் உட்பட திமுகவின் முக்கிய பேச்சாளர்கள் தேர்தல் விளக்க பொதுக்கூட்டங்களில் மேடையேறி முழங்கத்துவங்கி விட்டனர்.  கிண்டலும், கேலியும் நிரம்பி வழியும் தனது பேச்சின் மூலம்,  தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் துரைமுருகன்..

நீலகிரி, கோவை என அடுத்தடுத்த ஊர்களுக்கு பறக்கிறது அவரது தேர்தல் பிரச்சார வேன். தமிழக கட்சிகள் கூட்டணிக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் இந்த வேளையில் என்ன பேசுகிறார் துரைமுருகன் என அறிய கோவை பொதுக்கூட்டத்தில், துரைமுருகனின் பேச்சை கவனித்தோம்.

ஜெயலலிதாவும் கேள்வி நேரமும்

" தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் நீண்டகாலமாகி விட்டது. ஏனென்றால் அந்த இலாகாவை வைத்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு நாட்டு நடப்பு தெரியாது. அவர் பத்திரிகை படிப்பதில்லை. படித்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. சட்டமன்றத்தில் முதல்வருக்கு தினமும் 2 கேள்விகள் இருக்கும். ஏனென்றால் காவல்துறை இலாகா அவரிடம் உள்ளது. அவர் அந்த 2 கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகாலமாகிவிட்டது. இன்னும் அதை எங்களால் பார்க்க முடியவில்லை. முதலமைச்சராலதான் முடியலை. மற்றவர்களாவது பதில் சொல்வார்கள் என பார்த்தால்... அவங்க கிட்ட கேட்ட கேள்வி ஒண்ணு. அதுக்கு படிக்குறான்.. படிக்குறான்... 8 பக்கம் படிக்குறான்.
வித வித கெட்டப்புகளில் அமைச்சர்கள்

சட்டசபையில யார் அமைச்சர்னு எனக்கு தெரியாது. குத்து மதிப்பாதான் தெரியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். ஒரு நாள் மொட்டை அடிச்சுட்டு வர்றான். ஒரு நாள் பாதி மொட்டையோடு வர்றான். சட்டம் படிக்காதவர் சட்டத்துறை அமைச்சர். இவரை சட்டத்துறை அமைச்சராக போட்ட ஜெயலலிதா வெட்கப்பட்டிருக்க வேண்டும்

சட்டசபையில் என்றாவது நாட்டு நடப்பை பற்றி ஜெயலலிதா பேசியது உண்டா...? சபை நடக்கும் போது என்னைக்காவது வருவாங்க. அந்தம்மா போர்டிகோ கிட்ட வர்றப்போ சபை கப்சிப்னு ஆயிடும். சபாநாயகர் உட்பட அத்தனை பேரும் எந்திரிச்சு நிக்க ஆரம்பிடுச்சிடுவாங்க. சபை ஒரு நிமிடம் கூட மவுனம் சாதிக்க கூடாது. மவுன அஞ்சலி செலுத்தும் போது மட்டும்தான் அமைதியா இருக்கணும். ஆனா இந்த அம்மா வர்றாப்போ சபை முழுக்க அமைதியாயிடும். இதுவரை 110 அறிவிப்பின் கீழ் படித்த எந்த திட்டங்களையாவது முழுக்க அமல்படுத்தினாரா?

மின்சாரத்தை வெளியில் 13- 15 ரூபாய்க்கு வாங்கி கொடுக்கிறாங்க. நம் வரிப்பணத்திலிருந்து மின்சார வியாபாரி இடத்தில் இருந்து. குஜராத்தில் யூனிட் 5 ரூபாய். வேறு மாநிலத்தில் 3 ரூபாய். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 13, 15 ரூபாய் அப்படியென்றால் உள்ளடி வேலை எவ்வளவு என்பதுதான் நாங்கள் கேட்கும் கேள்வி.
ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தியில்லை

இன்னொன்று 2012-ம் ஆண்டுக்குள் 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும், 160 கிராம ஊராட்சிகளில்  150 கிலோவாட் பயோ காஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள். எந்த நகராட்சியிலாவது ஒரு மெகாவாட் தயாரித்திருக்கிறீர்களா? நகராட்சியில் குப்பைகளை முறையாக அள்ளினால் போதுமே.

மூடும் நிலையில் சென்னை துறைமுகம்

பல்கலைக்கழங்களில் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு, பல்கலைக்கழகங்கள் தரம் உலக தரத்துக்கு இணையாக உயர்த்தப்படும் என்றீர்கள். இன்று என்ன நிலைமை. 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரே இல்லை. இதுவரை ஒரு தொழிற்சாலை அதிமுக ஆட்சியில் வந்திருக்கிறதா? நோக்கியாவில் 12 ஆயிரம் பெண்கள் வேலை செய்தார்கள். ஆனால் அந்த ஆலை மூடப்பட்டு விட்டது. கட்சிக்கு 25 சதவீதம் கொடுங்க என மிரட்டினார்கள். இங்கு வந்து தொழில் துவங்கினோமே என நோக்கியா நிறுவனம் யோசிக்கத்துவங்கிய நேரம், சந்திரபாபு நாயுடு நோக்கியா ஆலையை அழைத்துக்கொண்டார்.
ஶ்ரீபெரும்புதூரில் உற்பத்தியாவதை துறைமுகத்துக்கு சீக்கிரம் கொண்டு சேர்க்கும் வகையில், மதுரவாயிலில் இருந்து துறைமுகம் வரை பறக்கும் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு பில்லரும் அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த உத்தரவிட்டதால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த தடாவில் இருந்து 30 கி.மீ. தூரத்தில்  எல அண் டி நிறுவனம் செயற்கை துறைமுகத்தை உருவாக்கி விட்டார்கள். பூந்தமல்லியில் இருந்து துறைமுகத்துக்கு வருவது நேராக அங்கு போய் விட்டது.

தமிழகத்தின் ஏற்றுமதி ஆந்திராவுக்கு போக ஆரம்பித்து விட்டது சென்னை துறைமுகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்?


ஆனால் செம்பரம்பாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக திறந்திருந்தால் தண்ணீர் கடலுக்கு போயிருக்கும். ஆனாலும் திறக்கவில்லை. ஏன் என்றால், முதல்வர் உத்தரவு கொடுக்கவில்லை. அவர் உத்தரவிடாததால் காலதாமதமானது. இனியும் தாமதித்தால் வெடித்து விடும் என்பதால் ஏரி திறக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நிவாரணப்பொருட்கள் குவிந்த நிலையில், வண்டியை நிறுத்தி ஜெயலலிதா பட ஸ்டிக்கரை ஒட்டியதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை.

திமுகவின் தீடீர் மதுவிலக்கு அறிவிப்பு ஏன்?

ஒருநாள் கலைஞர் குழந்தைகள் குடிக்கும் வீடியோவை பார்த்துக் குலுங்கி அழுதார்.  அப்போது என்னிடம்,  'யார் செய்திருந்தாலும், நாமே செய்திருந்தாலும் இனி நம் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்க கூடாது. என் மனம் தாங்கவில்லை' என சொல்லி அழுதார்.

மறுநாள் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம்” என அறிவித்தார். ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி கண்டிப்பாக செய்வார்" என்று உறுதிபட பேசினார் துரைமுருகன்.

ச.ஜெ.ரவி
படங்கள் : தி.விஜய்  விகடன்,com

கருத்துகள் இல்லை: