செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

எல்கேஜி சேர்க்கை...விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

சென்னையில் எல்.கே.ஜி. சேர்க்கை விண்ணப்பத்தை வாங்குவதற்காக பள்ளி நுழைவு வாயிலில் பெற்றோர்கள் விடிய விடிய காத்திருந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர். பிரபலமான பள்ளிகளில் சேர்த்தால் தான் குழந்தைகள் படிப்பார்கள் என்ற மனநிலை பெற்றோர் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் போட்டி அதிகரித்து விண்ணப்ப விற்பனை மூலமே லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் கல்வியாண்டுக்கு முன்பாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது. நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. விண்ணப்பங்கள் வழங்குவதே ஏப்ரல் மாதம் மேற்கொள்ளவேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதை பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் பொருட்படுத்துவதில்லை. 
 
எல்கேஜி, யுகேஜிக்கு கூட பெற்றோர் சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதைப்புடன் பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ளது டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பங்கள் நேற்று முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்ததது. 
 
இந்த விண்ணப்பங்களை பெற ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே பெற்றோர்கள் கால் கடுக்க பள்ளியின் நுழைவு வாயிலில் விடிய விடிய காத்திருந்தனர். பலர் வாகனங்களிலும் வந்து குவிந்ததால் பரபரப்பும் நிலவியது. இதையடுத்து திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு ஒரு வழியாக பள்ளியின் கதவுகள் திறக்கப்பட்டது. அதை பார்த்த பெற்றோர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். ஆனாலும் முதலில் 100 பேரை மட்டுமே பள்ளி வளாகத்திற்குள் அனுமதித்தனர். 
 
ஏன் இந்த கூட்டம் என கேட்ட போது முதலில் வருபவர்களுக்குதான் விண்ணப்பங்கள் வழங்கப்படுமாம் அதான் கடும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அலுவலகங்களுக்கு கூட அரை நாள் விடுமுறை சொல்லிவிட்டு காத்திருந்தார்களாம். 
 
இது குறித்து அங்கு காத்திருந்த பெற்றோர்கள் கூறுகையில், சிட்டியில் உள்ள மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் இந்த பள்ளியில் நன்கொடை என எந்த தொகையும் கேட்பதில்லை நல்ல தரமான கல்வியை வழங்குவதாகவும் அவர்கள் கூறினர். 
பெரும்பாலான பெற்றோர்கள் விண்ணப்பங்கள் விநியோகத்தை ஆன்லைன் மூலம் செய்ய வலியுறுத்தினர். குறைந்தது 4 முதல் 5 மணிநேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது சோர்வுடன் தெரிவித்தனர். விண்ணப்பங்கள் கிடைத்தவர்கள் எப்படியும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடலாம் என மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
 மொத்தம் உள்ள 400 இடங்களுக்கு 2000 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்.கே.ஜி. அட்மிஷனுக்கே இந்த பாடா எனவும் சிலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்

//tamil.oneindia.co

கருத்துகள் இல்லை: