ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஸ்டாலின் :அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன்.....தினமலர்

அழகிரியை சந்தித்தாலோ, அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ,
தி.மு.க.,வை உடைப்பேன்' என, கருணாநிதியிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறியதால் தான், அழகிரியை, நேற்று, கருணாநிதி சந்திக்கவில்லை என்றும், அவரை கட்சியில் இணைக்க எடுத்த முயற்சி தள்ளிப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அழகிரி, 'தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடையும்' என, சாபமிட்டதுடன், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும் தொடர்ந்து, கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று வரை அந்த விமர்சனம் தொடர்கிறது. அதேநேரத்தில், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக அழகிரி பதவி வகித்த போது, தென்மாவட்ட தி.மு.க.,வில், கடும் குழப்பம் நிலவி வந்தது. ஆனால், அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய பின், இதை கொஞ்சம், கொஞ்சமாக சரி செய்ய ஆரம்பித்தார் ஸ்டாலின். அவரின் இந்த நடவடிக்கையால், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த பலர், ஸ்டாலின் விசுவாசிகளாக மாறினர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால், அழகிரியால், ஸ்டாலினின் நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை.  சுப்பிரமணியம் சாமி சொல்லி விஜயகாந்த் மட்டும் அல்ல ஸ்டாலினும் கூடவே ஆடுறார்?
இருப்பினும், அழகிரியின் கோபத்தை குறைத்து, அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க, அவரது சகோதரி செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலர் முயற்சி எடுத்தனர்; ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், சென்னை, கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று திடீரென சென்ற அழகிரி, தன் தாயார் தயாளுவை சந்தித்துள்ளார். ஆனால், தந்தையான கருணாநிதியை சந்திக்கவில்லை; கருணாநிதியிடமிருந்து அவருக்கு அழைப்பும் இல்லை.

இதுகுறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்தாவது: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சியில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது என, கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர் மாலை ராஜா உள்ளிட்ட சிலரை, மீண்டும் இணைத்து கொண்டார்.
அதேபோல, அழகிரியையும் சேர்க்க விரும்புகிறார். ஜன., 30ல், அழகிரி தன் பிறந்த நாளையொட்டி, ஆசி பெற வந்தால், அந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி, கசப்புகளை போக்கி விடவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அன்றைய தினம் கோபாலபுரத்திற்கு அழகிரி செல்லவில்லை. நேற்று தான் சென்றார். இருந்தும், அவரை கருணாநிதி சந்திக்கவில்லை. இதற்கு, ஸ்டாலினின் கடும் எதிர்ப்பே காரணம். உழைப்பை கொச்சைப்படுத்துவதா?
'கட்சிக்காக நான் உயிரைக் கொடுத்து உழைக்கிறேன்; என் குடும்பம் உழைக்கிறது. ஆனால், உங்கள் பிள்ளையாக இருந்தும், கட்சிக்கு எதிராக, பல மாதங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலோ,அது என்னையும், என் உழைப்பையும் கொச்சைப்படுத்துவது போலாகும். அதை, என்னால் அனுமதிக்க முடியாது.

அதை மீறி, அழகிரியை நீங்கள் சந்தித்தாலோ, அவரை கட்சியில் சேர்ப்பதாக உத்தரவாதம் கொடுத்தாலோ, என் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடுமையான முடிவை எடுப்பேன். கட்சி பிளவுபடலாம்; நீங்கள் வருத்தப்பட நேரிடும்' என,
கருணாநிதியிடம் ஸ்டாலின் கடுமையாக கூறியுள்ளார்.
ஸ்டாலினின் இந்தக் கடுமையான பேச்சு காரணமாகவே, நேற்று கோபாலபுரம் வந்த அழகிரியை கருணாநிதி சந்திக்கவில்லை. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
கோபாலபுரம் வீட்டில் நடந்தது என்ன? 
கடந்த மூன்று நாட்களாக, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டிற்கு திடீரென வந்தார். அங்கு, தன் தாயார் தயாளுவை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவரின் உடல்நலம் குறித்தும் விசாரித்து உள்ளார்.
பின், வீட்டின் பிரதான ஹாலில் உள்ள சோபாவில், சிறிது நேரம் அமர்ந்துள்ளார். மீண்டும், தயாளுவின் அறைக்கு சென்ற அவர், தான் ஊருக்குச் செல்லவிருப்பது பற்றி கூறியுள்ளார்.
அழகிரி வீட்டிற்குள் வந்ததும், அங்கிருந்த கருணாநிதியின் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பதற்றமடைந்து உள்ளனர். வீட்டிற்கு அழகிரி வந்துள்ள தகவலை, கருணாநிதிக்கு தெரியப்படுத்தியும், அவர் அழகிரியை சந்திக்க அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல, அழகிரியும், கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக, யாரிடமும் சொல்லி அனுப்பவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை: