புதன், 10 பிப்ரவரி, 2016

தினமலர்: காங்கிரஸ் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்கிறது.. 25 தான் தரமுடியும் என்கிறது திமுக....

சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணியில் சேர்ந்தால், 25, 'சீட்'கள் மட்டுமே தரப்படும்; ஆட்சியில் பங்கு என்ற பேச்சே கூடாது' என, காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை விதித்துள்ளது. பீஹார், 'பார்முலா'வை இங்கு பின்பற்ற காங்., நினைத்தால், அது நடக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 'மெகா' கூட்டணி: கடந்த ஆண்டு, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, 'மெகா' கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றன. அதாவது, தேர்தலின் போது, காங்கிரசுக்கு, 40 சீட்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 27 இடங்களில், காங்., வெற்றி பெற்றது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், காங்., சார்பில், நான்கு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம  விடமாட்டார் .
எனவே, தமிழக சட்டசபைதேர்தலிலும், பீஹார் பாணியில் கூட்டணி அமைக்க, காங்., துணைத் தலைவர் ராகுல் விரும்புகிறார். அதனால், 'தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால், 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என, அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ராகுலின் இந்த விருப்பத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், தி.மு.க., மேலிட தலைவர்களிடம் தொலைபேசியில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

பேச்சுக்கே இடமில்லை:
அதைக் கேட்டதும், தி.மு.க., மேலிட தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். 'தி.மு.க.,வுடன்கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு, 20 முதல், 25 சீட்களை மட்டுமே தர முடியும். ஆட்சியில் பங்கு தர முடியாது; அதுபற்றிய பேச்சுக்கே இடமில்லை' என, ஆவேசமாக கூறியுள்ளனர். அத்துடன், கூட்டணி தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேச செய்யப்பட்டிருந்த ஏற்பாடும், ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
'தி.மு.க.,வின் நிபந்தனைகளை காங்கிரஸ் ஏற்றால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் பேசுவேன்; இல்லையெனில், பேச்சே வேண்டாம்' என, கருணாநிதி கண்டிப்புடன் கூறி விட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தன் நிபந்தனைகளில் உறுதியாக இருந்தால், வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுடன் பேச்சு நடத்தும்படி, தி.மு.க., மேலிட தலைவர்களுக்கு, கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: