திங்கள், 16 நவம்பர், 2015

Chennai மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா? கனமழை எச்சரிக்கை

சென்னையில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலை நாளான, இன்றும், மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரம் நிமித்தமாக பயணிப்போர் என, அனைவரும் அவதிப்பட உள்ளனர். இவர்களுக்காக, போதிய ரயில்களையும், பஸ்களையும் இயக்க வேண்டியது அவசியம். உயர்த்தப்பட்ட வழித்தடமாக உள்ளதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான மேம்பால ரயில் சேவை, கோயம்பேடு - ஆலந்துார் இடையிலான மெட்ரோ ரயில் சேவை ஆகியவை, மழை பாதிப்பில் இருந்து தப்புகின்றன. ஆகையால், மேம்பால பாதையில் செல்லும் மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும் வழக்கம் போல் இயங்கும்.தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழையின் தாக்கம் அதிகம் இருந்தால், மேம்பால வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கத்தில், 10 முதல், 15 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால், இயக்கத்தில் எந்த சிக்கலும் இருக்காது' என்றார்.
மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை பாதிப்பால், கோயம்பேடு - ஆலந்துார் இடையே நுாறடி சாலையில் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வதை பலர் தவிர்க்கின்றனர். பஸ்சில் பயணித்தாலும், போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பருவ மழை துவங்கிய நாளில் இருந்து, மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை, 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் இயக்கம் எப்படி?>*எம்.ஆர்.டி.எஸ்., என அழைக்கப்படும் மேம்பால ரயில் சேவையில், தினமும், 160 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன
*சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே அதிகாலை, 4:10 மணிக்கு துவங்கி, இரவு, 10:20 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன
*வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கி, இரவு, 11:20 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன
*காலை, 7:15 மணி முதல், 8:15 மணி வரை, 15 நிமிட இடைவெளியிலும், 8:15 மணி முதல், 10:15 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன
*மதியம், 12:00 மணிக்கு மேல், 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கம் இருக்கும்
*கோயம்பேடு - ஆலந்துார் மார்க்கங்களில், காலை, 6:00 மணிக்கு, மெட்ரோ ரயில்கள் இயக்கம் துவங்கி, இரவு, 10:00 மணி வரை, இயக்கப்படுகின்றன
*காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை; மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 10 நிமிடங்களுக்கு, ஒரு மெட்ரோ ரயில் என இயக்கப்படுகிறது
*மற்ற நேரங்களில், 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன
*இச்சேவைகள் தொடர்ந்து செயல்படும் வகையில், நடவடிக்கை எடுத்தால், பயணிகள் தங்குதடையின்றி செல்ல முடியும். எக்காரணம் கொண்டும், மின்சார ரயில் சேவையை குறைக்க கூடாது என்பதுதான் அனைவரும் எதிர்பார்ப்பாகும்.

- நமது நிருபர் -  dinamalar.com 

கருத்துகள் இல்லை: