வியாழன், 19 நவம்பர், 2015

நிதிஷ்குமார் பதவியேற்பில் 35 தலைவர்கள்..ஸ்டாலின், மம்தா,தேவகௌடா,ராகுல்,கேஜ்ரிவால்,சித்தராமையா.....

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் டி.ராஜா, யெச்சூரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட 35 தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மகா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று அணி அமைவதற்கான வலுவான அடித்தளத்தை பீகார் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் 35 தலைவர்கள் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கும் நாளைய விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். நிதிஷ்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருக்கும் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் விவரம்:
8 முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், சிக்கிம் முதல்வர் சாம்லிங், மணிப்பூர் முதல்வர் இபோபிசிங், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முதல்வர் சித்தராமையா,
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் குலாம்நபி ஆசாத், தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா, குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்,
ஸ்டாலின் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா அமைச்சர் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரகாஷ் அம்பேத்கர், இந்திய தேசிய லோக்தளத்தின் அபய் சவுதாலா, ராம்ஜேத்மலானி, முன்னாள் எம்.பி.க்கள் ஹெச்.கே. தூவா, ராஜ்பப்பர் ஆகியோர் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: