சனி, 30 மார்ச், 2013

நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல்?

புதுடெல்லி : காங்கிரசுக்கு
எதிராக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்
யாதவ் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடுத்த ஆண்டு மே வரை நீடிக்காது என்றும் நவம்பர் மாதம் மக்களவைக்கு தேர்தல் வரும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக கடந்த வாரம் வாபஸ் பெற்றது. ஐ.மு. கூட்டணியில் இருந்தும் விலகியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு மெஜாரிட்டி இழந்தது. எனினும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும் நிலையில், அரசு பதவியில் நீடித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரசுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியதையடுத்து, அவரை நீக்க வேண்டும் என்று முலாயம் சிங் போர்க்கொடி தூக்கினார்.
பின்னர், பெனி பிரசாத் வர்மா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததால் அந்த பிரச்னை ஓய்ந்தது. ஆனாலும், காங்கிரசை முலாயம் சிங் தொடர்ந்து தாக்கி வருகிறார். பதிலுக்கு பெனி பிரசாத் வர்மாவும் தனது குடும்பத்துக்காக முலாயம் பாடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இரு கட்சிகளிடையே உறவு மோசமடைந்து வருவதால் அரசுக்கு அளிக்கும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி, எந்த நேரத்திலும் வாபஸ் பெறலாம் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்துவது போல, அரசுக்கு அளிக்கும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி வாபஸ் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த முலாயம் சிங் யாதவும்,

முழு பதவி காலமும் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று உறுதியாக கூறவில்லை. இப்போதைக்கு ஆதரவு வாபஸ் இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளார். அதே நேரம், அரசுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவை சேர்ந்த அமைச்சரையே சிறைக்கு அனுப்பியதாகவும் ஆதரவு அளிக்கும் கட்சிகளை காங்கிரஸ் ஏமாற்றுவது எப்போதும் வழக்கம் என்றும் கடுமையாக தாக்கினார்.

 சிபிஐயையும் வருமான வரித்துறையையும் வைத்து மத்திய அரசு ஆட்சி நடத்துவதாகவும் மற்ற கட்சிகளை பழிவாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சிபிஐயை வைத்து என்னை மிரட்டியபோதும் நெருக்கடியான நேரத்திலும் அரசுக்கு ஆதரவு அளித்தேன் என்றும் முலாயம் கூறியுள்ளார். எனவே, இப்போது இல்லாவிட்டாலும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை சில மாதங்களில் முலாயம் சிங் யாதவ் வாபஸ் பெறுவார் என்றும் நவம்பர் மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் வரும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய முலாயம் சிங், நவம்பரில் தேர்தல் வரும் என்று குறிப்பிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பா.ஜ. மூத்த தலைவர் பல்பீர் புஞ்ச் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசு ஆட்சி காலத்தை நிறைவு செய்யாது. அரசுக்கு அளிக்கும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி விரைவில் விலக்கி கொள்ளும். அரசு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கே கூறியுள்ளார். மக்களவைக்கு நவம்பரில் இடைத்தேர்தல் வருவது தவிர்க்க முடியாதது’’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் ராய் கொல்கத்தாவில் நேற்று கூறுகையில், ‘‘மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு திரிணாமுல் வாபஸ் பெற்றது. சமீபத்தில் திமுகவும் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால், இந்த அரசு மைனாரிட்டி ஆகிவிட்டது. எனவே, இனியும் ஆட்சியில் தொடர இந்த அரசுக்கு உரிமை இல்லை. உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.

டெல்லியில் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, ‘‘மெஜாரிட்டியை இழந்து ஐமு கூட்டணி அரசு தள்ளாடுகிறது. காங்கிரஸ் நம்பத்தகாத கட்சி என்று முலாயம் கருதினால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: