ஞாயிறு, 24 மார்ச், 2013

ஸ்டாலின் வீ டு ரெய்டு : காங்கிரஸ் மீது அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

சி.பி.ஐ. அமைப்பை காங்கிரஸ் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளது என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே குறை கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான ஆதரவை தி.மு.க. திரும்பப் பெற்றதும் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது குறித்து ஹசாரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஹசாரே, ’’சி.பி.ஐ. தனது சொந்த முடிவுகளின்படி செயல்படுகிறது என்று கருதுவது தவறானது. அது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த அமைப்பை லோக்பாலின் கீழ் கொண்டு வந்தால், அது ஊழலைத் தடுக்க உதவும். சி.பி.ஐ.யில் சில நல்ல அதிகாரிகள் இருந்தபோதிலும், அந்த அமைப்பை காங்கிரஸ் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளது. சி.பி.ஐ.யில் உள்ள அனைவரும் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நெருக்கடிகளுக்குப் பணிந்து விடுகிறார்கள்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதைப் பொறுத்தவரை, தனது ஊழல் காரணமாக காங்கிரஸ், மக்களின் ஆதரவை இழந்து வருகிறது.
காங்கிரஸ் தவறான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு சமாஜவாதிக் கட்சி ஆதரவளித்து வருகிறது. இதுபோன்ற மாநிலக் கட்சிகள் அரசுக்கு நெருக்கடி அளிப்பதால் அவை நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து நான் பிரிந்தபோதிலும் அவருக்கும் எனக்கும் மோதல் ஏதும் இல்லை. அவர் தனது நோக்கங்களை அரசியல் ரீதியாக எட்ட வாழ்த்துகிறேன்."ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பைக் கலைத்த பின், நான் எந்தக் குழுவையும் அமைக்கவில்லை. ஒரு நோக்கத்துக்காக தன்னலமற்ற தொண்டர்களைப் பெறுவது கடினம். நான் இப்போது முன்னாள் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங்குடன் இணைந்து அரசியல் சார்பற்ற அமைப்பான ஜனதந்திர மோர்ச்சாவை நடத்தி வருகிறேன் லோக்பால் அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார் ஹசாரே.

கருத்துகள் இல்லை: