சனி, 30 மார்ச், 2013

வாரிசுகள் ஹீரோவாக முடியவில்லையே? புழுங்கிப் புலம்பும் பெருசுகள்

என்னதான் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டாலும் தன் வாரிசுகள் அப்படி ஆகமுடியவில்லையே என்று உள்ளுக்குள் பொருமி, புழுங்கிப் புலம்பும் சிலரின் மைண்ட் வாய்ஸ்கள்...

 பாரதிராஜா: ''கிராமத்து ஆடு, மாடு, பானை, சட்டியெல்லாம் நடிக்கவெச்சேன். அட, ராஜான்னு ஒரு நடிகரை இன்னைக்கு இருக்கிற தலைமுறைக்குத் தெரியுமான்னே தெரியலை. ஆனா, சிட்டியில இருந்து மொஃபசல் பஸ் பிடிச்சு பட்டியில லேண்ட் ஆகிற ஹீரோவா பல படங்களில் ஆக்கினேன். அதையெல்லாம் ரசிச்ச என் இனிய தமிழ் மக்கள், என் புள்ளை அதாவது மை சன் மனோஜை மட்டும் ஏத்துக்கலை. நாம கட்டுன 'தாஜ்மஹால்’ல ஷாஜஹானா மட்டுமில்லை, கொத்தனாராக்கூட மனோஜை மக்கள் ஏத்துக்கலை.
சரி பரவாயில்லைனு, அப்போ பிரபலமா இருந்த சரண் டைரக்ஷன்ல 'அல்லி அர்ஜூனா’னு ஒரு படத்தில நடிக்கவெச்சேன். ப்ச்..... ஹீரோவா நடிச்சாலே வில்லன் மாதிரி தெரியுற எம் மவனை, வில்லனாவே காட்டுனா எப்படி இருக்கும்?
வில்லனா நடிச்ச சத்யராஜை ஹீரோவாக்கின நான், இப்போ எம் மவன் மனோஜை மறுபடியும் வில்லன் ஆக்கிட்டேன். 'அன்னக்கொடி’தான் அவனோட கடைசி டார்கெட்டு. அப்படியாவது வருமா அவனுக்கும் மார்க்கெட்டு?''
பாக்யராஜ்: ''சாதாரண முருங்கைக்காயைப் பிரபலமாக்குன எனக்கு, என் மகன் சாந்தனுவைப் பெரிய ஹீரோ ஆக்குறதுதான் இன்னைக்கு வரைக்கும் கஷ்டமா இருக்கு. கலைப்புலி தாணுவோட தயாரிப்புல நடிச்ச முதல் படம் 'சக்கரக்கட்டி’னு பேர் வெச்சதாலோ என்னமோ, கரைஞ்சுடுச்சு.
இந்தக் கவலையைப் போக்குற மாதிரி, மக்களுக்கான கதை என்கிட்டே இருக்குன்னு, தங்கர் கொலைக் களத்துலருந்து... ஸாரி, திரைக் களத்துல இருந்து நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. நானும் படம் நல்லாப் பேசப்படும்னு எதிர்பார்த்தேன். ஆனா, படம் முழுக்க தங்கர் பச்சான்தான் பேசிக்கிட்டும் டான்ஸ் ஆடிக்கிட்டும் இருந்தார். அந்தக் காலத்துல நான் நடிச்ச படங்கள்ல எனக்குத் துணையா, மண்ணாங்கட்டி, செம்பட்டைன்னு சில பேரை நடிக்கவெச்சிருப்பேன். அது மாதிரி என் மகனை ஆக்கிட்டாரு தங்கர். சரி, நாம நடிச்ச பழைய படத்தை ரீமேக் செஞ்சு சாந்தனுவை நடிக்கவைக்கலாம்னு பார்த்தா, அந்த லட்டையும் பிச்சு பூந்தி ஆக்கிட்டாங்க!''
சத்யராஜ்: ''வில்லனா வந்தே மக்கள்கிட்டே அப்ளாஸ் வாங்குன ஆளு நாம.. ஆனா, நம்ம வாரிசோ, நோகாம ஹீரோவா என்ட்ரி ஆகியும் நோ ரெஸ்பான்ஸுங்க. விக் வெச்சோ வெக்காமலோ என்னை இப்பவும் நடிக்கக் கூப்புடுறவங்க, நம்ம கண்ணு சிபியை, பிரிவியூ ஷோ பார்க்கக்கூட கூப்பிட மாட்டேங்கிறாங்க. அட, ஈமுக் கோழி விளம்பரத்துல நடிக்கக்கூட கூப்பிடலையே, என்ரா சிபி, நீ தங்கமா, தகிடு தகிடா?''
பி.வாசு: ''என் மகன் ஷக்தியை வெச்சு ஒரு படம் எடுத்தேன். ஆனா, அப்படி ஒரு படம் வந்துச்சாங்கிறதுல உங்களை மாதிரியே எனக்கும் சந்தேகமா இருக்கு. சந்திரமுகி ஆவியை வெச்சு மக்களை மிரட்டின எனக்கு, நடிக்கச் சொல்லி என் மகனை விரட்ட முடியலை. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கேனு பாடுன மவன், ஒரு சிம்னி விளக்கா சினிமாவுல பிரகாசிப்பானானு சந்தேகமா இருக்கே!''
எஸ்வி.சேகர்: ''சினிமாவா டிராமாவானு ஜனங்க குழம்புற அளவுக்கு நடிச்சுப் பேர் வாங்கினவன். அம்மாவிடம் சீட் வாங்கி ஜெயிச்சு, பின்னால அவங்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரன் என்ற பெருமை எனக்கு இருந்தாலும், என் பையனுக் கும் அப்படி ஒரு பேக்ரவுண்டு வேணுமுன்னு சொந்தமா ஒரு படம் எடுத்தேன். 'வேகம்’தான் படத்தோட டைட்டில். படம் அவ்வளவு வேகமா தியேட்டரை விட்டுப் போயிடுச்சு. ஒரு கலைஞனோட வாரிசா இருந்துட்டு கலைப் பசியோடு இருப்பான்னு பார்த்தா, கொலைப் பசியோட இருக்கான். மறுபடியும் அம்மா கட்சியில சேரலாம்னு தூது விட்டா, நோ ரெஸ்பான்ஸ். நானும் என் வாரிசும் சுப்பிரமணியசாமி கட்சியில சேர்ந்துட்டா, எப்படியும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 10-ஐ எட்டிடும்னு நினைக்கிறேன்!''  
- செ.சல்மான்
thanks vikatan

கருத்துகள் இல்லை: