வெள்ளி, 29 மார்ச், 2013

ஹோலி கொண்டாட்டத்தில் நாடு முழுவதும்

புதுடெல்லி-: ஹோலி பண்டிகையினால் ஏற்பட்ட சாயங்களை
கழுவுவதற்காக நீர்நிலைகளில் குளிக்க சென்ற 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் நேற்று ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் முடிந்து மாலையில் சாயங்களை கழுவுவதற்காக நீர்நிலைகளில் குளிக்க சென்றவர்களில் 27 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரில் கங்கை நதியில் குளிக்க சென்ற 7 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களது உடல் இன்னும் கிடைக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மற்றும் நவ்சாரை மாவட்டங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி 3 பேர் இறந்தனர். இதே மாநிலத்தை சேர்ந்த நாடியா மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
5 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் ஸ்ரீகொண்டாவில் ஹோலி பண்டிகை கொண்டாட பசந்த் செருவு ஏரியில் ஏராளமானோர் குளித்தனர். அப்போது மதுசூதனன் (14), தாஷிக் (15), அசோல் (15), இம்ரான் (17), அக்பர் (16) ஆகிய 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே மாவட்டத்தை சேர்ந்த காந்தாரி மண்டலம் தாத்தங்கல் பகுதியை சேர்ந்த ராமராஜூ (30) என்பவர் ஏரியில் மூழ்கி இறந்தார். கரீம் நகர் மாவட்டம் ஹசிலலா மண்டலம் ராஜீவ் நகரை சேர்ந்த அன்புதாஸ் (28), சந்தோஷ் (27) ஆகியோர் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தனர். அதே மாவட்டத்தை சேர்ந்த முகமத் அஜிமுதீன் (27), நலகொண்டா மாவட்டம் ஆர்தஸ் நகரை சேர்ந்த சாய் கிரண் (20), திம்மாப்பூர் மண்டலம் திருப்பதி (26), அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (38)ஆகியோர் கோதாவரி ஆற்றில் மூழ்கி பலியாகினர். இதேபோல் மேடக் மாவட்டத்தில் 9 பேர் என மொத்தம் 21 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் (25) என்பவர் ஹோலி கொண்டாடி விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: