ஃபுட்கோட் இருந்தால் திரையரங்கு கட்டணத்தை 120 வரை உயர்த்தலாம் என்பதால் திரையரங்குக்குள் இரண்டு சேர்கள் போட்டு ரெடிமேட் ஃபுட்கோட் தயார். டிக்கெட் கட்டணம் 120 ரூபாய்.
தேவி பாலாவில் சீட்டுகளின் எண்ணிக்கை குறைவு. தாழ்வான மேற்கூரை. புரஜெக்டரின் கீழே நின்றால் உங்கள் தலை திரையில் தெரியும். அருகிலே இப்படியென்றால் திரையை நோக்கி போகப் போக எங்கு எழுந்து நின்றாலும் திரையில் உருவம் தெரியும்.
12 மணி காட்சிக்கு பன்னிரெண்டு மணிவரை கதவு திறப்பதில்லை. பிறகு அவசர அவசரமாக உள்ளே ஆட்களை திணிக்கிறார்கள். ஒருஆள் உட்கார்ந்தால் அவர்களை கடந்து உள்ளே செல்வதற்கு சர்க்கஸ் கற்றிருக்க வேண்டும். அப்படியொரு குறுகலான இடைவெளி. இந்த லட்சணத்தில் பாதி படத்தின் நடுவே தலையும் உடம்பும் திரையில் தெரிய, சார் ப்ளீஸ் இந்த ஸ்னாக்ஸை ஒன்பதாம் நம்பருக்கு பாஸ் பண்றீங்களா என்ற சிப்பந்திகளின் தொந்தரவு வேறு. இந்த படாவதி திரையரங்குக்கு இவ்வளவு அதிக கட்டணம் பகல் கொள்ளை. இன்னொரு வழிப்பறி கேன்டீன். எம்ஆர்பிக்குதான் தண்ணீர் மற்றுமுள்ள பொருட்களை விற்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இங்கு எல்லாமே இரட்டைவிலை.
ஒருகாலத்தில் தேவி திரையரங்கின் பின்புறம் உள்ள பிரியாணி கடையில் நன்றாக வெட்டிவிட்டு திரையரங்கில் சாய்வது அங்குள்ளவர்களின் பழக்கமாக இருந்தது. இப்போது பின்பகுதி வழியாக ஆட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
புரஜெக்டர் ரொம்ப சுமார். ஒலி அதைவிட மோசம். கதாபாத்திரங்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்டால்தான் ஆயிற்று. எம்ஆர்பிக்கு இங்கேயும் எந்த மரியாதையில்லை. ரிசர்வேஷன் இருந்தால் மட்டுமே சீட்டு எண் போடப்பட்டிருக்கும் இல்லையென்றக்ல் டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டருக்குள் நுழைய க்யூ பிடிக்க வேண்டும். முந்துகிறவர்களுக்கே நல்ல இருக்கை. தயவுதாட்சண்யம் இல்லாமல் பாக்கு பாக்கெட்களை தடவி எடுத்து பக்கெட் தண்ணீரில் பிரித்து போட்டுவிட்டே உள்ளே அனுமதிக்கிறார்கள்
உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு திரையரங்குகள். சரியான பராமாரிப்பில்லை. குடிநீர் இருக்கும் தண்ணீர் கேனை திறந்தால் அவ்வளவுதான். வண்டல் படிந்த நீர்தான் எப்போதுமிருக்கும். மினி உதயம் திரையரங்கின் வடிவமைப்பை உள்வாங்கிக் கொள்ள நாலு படங்களாவது அங்கு பார்த்தாக வேண்டும். மற்ற திரையரங்குகளைப் போலவே வெளியே பத்து ரூபாய்க்கு விற்கும் பப்ஸை கூசாமல் இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.
மது அருந்தினால் உள்ளே அனுமதியில்லை. ஆனால் கால்வாசி பேர் பக்கத்து டாஸ்மாக்குக்கு போய்விட்டே வருகிறார்கள். ஸ்டெடியாக வந்தால் அனுமதி உண்டு. ஆடிக்கொண்டே வந்தால் கெட்அவுட்தான்.
ரோகிணி, ராகினி, ரூபினி என ஆரம்பிக்கப்பட்ட இந்த வளாகத்தில் ரக்ஷினி, ருக்மினி என ஐந்து திரையரங்குகள். அடித்தட்டு மக்கள்தான் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள். ரோகிணி வளாகத்தில் உள்ள திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் எது என்று அந்த கடவுளுக்கே தெரியாது. திரையரங்கிலும் சரி, டிக்கெட்டிலும் சரி... கட்டண விவரம் இருப்பதில்லை. கவுண்டரில் இருப்பவருக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் கட்டணம். அனந்தகோடி அழிச்சாட்டியங்களை பொறுத்து இங்கு மக்கள் குவிய ஒரே காரணம், எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைக்கும். ரஜினி படத்துக்கே இரண்டாவது நாள் எளிதாக டிக்கெட் வாங்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதில் சில திரையரங்குகள் நூறு மீட்டர் ஓட்டப்பந்தய ஓடுதளம் மாதிரி குறுகி நீண்டிருக்கும். சுவரோரமாக சீட் கிடைத்தால் முன்ஜென்மத்தில் அடாத காரியம் எதுவோ செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். குத்து மதிப்பாகதான் கதாபாத்திரங்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியும். அந்தவகையில் நமது கற்பனா சக்தியை வளர்ப்பதில் இந்த வளாகத்துக்கு பெரும் பங்குண்டு. உள்ளே நுழைந்ததும் வெக்கையான நாற்ற வரவேற்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. கேன்டீன் மட்டும் சொல்லி வைத்த மாதிரி இரட்டைவிலை.
கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்கு. திருவனந்தபுரம் ரயில்நிலையத்துக்கு எதிரில், பேருந்துநிலையத்தை ஒட்டி ஜாகை. மொத்தம் மூன்று திரையரங்குகள். கைரளி, நிலா மற்றும் ஸ்ரீ. திருவனந்தபுரம் ஏ கிரேடு திரையரங்குகளும், தமிழக அரசும் விஸ்வரூபத்தை புறக்கணித்த போது இந்த மூன்று திரையரங்குகளிலும் கேரள அரசு விஸ்வரூபத்தை திரையிட்டு கணிசமாக கல்லா கட்டியது. சில வருடங்களுக்கு முன்புவரை மூட்டைப் பூச்சிக்கு பயந்து அந்தப் பக்கம் யாரும் போவதில்லை.
ஆனால் இன்று திருவனந்தபுரத்தின் சுத்தமான திரையரங்கு வளாகங்களில் இதுவும் ஒன்று. 80 ரூபாய் டிக்கெட் கட்டணம். அரசாங்க ஊழியர்களுக்கு நேர் எதிரான பொறுப்பான ஊழியர்கள். அரசாங்கம் நிர்வகிக்கும் திரையரங்கா என ஆச்சரியப்பட வைக்கும் சுத்தம்.
டிக்கெட் தந்து, அனைத்து பார்வையாளர்களும் தத்தமது இருக்கையில் அமர்ந்துவிட்டார்களா என்பதை சோதித்த பிறகே படத்தைப் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் இல்லாத அதிசயம், 18 ரூபாய் மதிப்புள்ள ஒருலிட்டர் தண்ணீர் பாட்டில் அதேவிலைக்கு கேன்டீனில் கிடைக்கிறது.
கேரள அரசாங்கத்தைப் போல் தமிழக அரசும் திரையரங்குகளை தனது பொறுப்பில்.... ம்ஹும், வேண்டவே வேண்டாம். அரசாங்கத்தின் பொறுப்பில் நடக்கும் டாஸ்மாக் பன்றி கொட்டகையின் நிலை திரையரங்குகளுக்கு நிச்சயம் வேண்டாம். குவாட்டருக்கு ஐந்து ரூபாய் அதிகம் கேட்பது போல் தண்ணீர் பாட்டிலுக்கும் கேட்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக