வியாழன், 31 ஜனவரி, 2013

இரவில் சிக்கும் இளம்பெண்களை சீரழித்த கான்ஸ்டபிள் ..பணக்காரன் ஆக பகீர் கொள்ளை நெட்வொர்க்

கோவில்பட்டி: பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கோவில்பட்டி போலீஸ்காரர் கையும் களவுமாக சிக்கினார். நகை பறிப்போடு பல பெண்களை மிரட்டி அவர் சீரழித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று முன்தினம், நெல்லையில் வங்கி தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் தனது அக்காள் மகள் செல்வியை (18) பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி புது பஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராம் அனுமன் நகர் பகுதியில் வரும்போது 2 பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்தனர். செல்வி நகைகளை கத்தியை காட்டி பறித்தனர். அவர் கூச்சலிடவே 3 பேரும் ஓட்டம் பிடித்தனர்.


அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மடக்கினர். ஒருவர் மட்டும் சிக்கினார். தகவலறிந்ததும் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மக்கள் பிடித்து வைத்திருந்தவரை பார்த்ததும் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வேலைபார்த்து வரும் போலீஸ்காரர் காவேரிமணியன் (32). அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் காவேரிமணியன். 2003ல் போலீஸ் பயிற்சி முடித்தபின் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டார். 2 ஆண்டுக்கு முன்பு கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் தடம் மாறிய காவேரிமணியன் 3 ரவுடிகளை துணைக்கு சேர்த்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட தொடங்கினார். பசுவந்தனை ரோட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை, கோவில்பட்டியில் மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு, நாலாட்டின் புதூர் பகுதியில் 2 பெண்களிடம் 12 பவுன், ஊத்துப்பட்டி பெண்ணிடம் 5 பவுன், இளையரசனேந்தல் கல்லூரி மாணவியிடம் 4 பவுன், அதே பகுதியில் மற்றொரு பெண்ணிடம் 5 பவுன், இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்களிடம் 15 பவுன் என 50 பவுனுக்கு மேல் வழிப்பறி செய்துள்ளனர்.

தப்பி ஓடிய மற்ற 3 பேரும் கயத்தாறு மற்றும் அதன் அருகில் உள்ள ஓலைக்குளத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கைதான போலீஸ்காரர் காவேரிமணியன் பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில்பட்டி ராம் அனுமன் நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு இரவு நேரங்களில் ஜோடிகள் வருவார்கள். அங்கு சென்று அவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டும் காவேரிமணியன், நகையை பறிப்பதுடன் பெண்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். வயது வித்தியாசமின்றி பெண்களை மிரட்டி அவர் சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  tamilmurasu.org

கருத்துகள் இல்லை: