சனி, 2 பிப்ரவரி, 2013

இது இன்னொரு ரிசானாவின் கதை !

தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.
ஏழை விவசாயியான கபிபுல்லாவின் மூத்தமகள் ரிசானாவின் உண்மையான பெயர் ஆரிபா. சவூதி செல்லும் போது  இவருக்கு வயது 17. பாரிச வாதத்தால் படுத்த படுக்கையில்  உள்ள தனது தாயின் மருத்துவச் செலவையும் சகோதரிகளின் கல்வியையும் கருத்தில் கொண்டு சென்றவர் கந்தளாயில் உள்ள வேறு ஒரு முகவரியில் உள்ள ஆரிபா என்னும் பெயருடையவரின் அடையாளத்திலேயே சென்றுள்ளார். இதனை கிண்ணியாவைச் சேர்ந்த உதவிமுகவர் ஒருவரே ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கும் முற்பணம் கூட தமது மகளுக்கு கிடைக்கவில்லை என மிகுந்த மன வேதனையுடன் ரிசானாவின் தந்தை கபிபுல்லா தெரிவிக்கிறார்.
மேலும் தெரிவிக்கையில், ரிசானா சென்று மூன்று மாதங்களாக எம்முடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றும் வீட்டின் எஜமானி நல்லவர் இல்லை. தனக்கு அடிப்பார். சாப்பாடு தருவதில்லை. நான் சவூதி மக்காவில் தான் இருக்கிறேன். என்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண்கள் இருவர் வேலை செய்கிறார்கள். எனவே என்னை நாட்டுக்கு திருப்பி எடுங்கள் என்று ரிசானா தெரிவித்தார் என்று அவர் கூறுகின்றார்.
இவ்விடயம் தொடர்பாக தந்தையான கபிபுல்லா உதவி முகவரைச் சந்தித்து தெரிவிக்கையில், மூன்று மாதம் முடியும் வரை எதுவும் செய்ய முடியாது. பொறுமையாக இருக்கும் படியும் அதன் பின்னர் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நான்காவது மாதம் ரிசானா என்ற பெயரில் சென்ற ஆரிபா இறந்து விட்டார் என்ற செய்தி உதவிமுகவர் ஊடாக குடும்பத்தாருக்குக் கிடைத்தது. இவருடைய சடலத்தை சவூதியிலேயே அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம்  நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு தான் தனது உறவினர் ஒருவருடன் சென்று கொழும்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறையிட்டதாகவும் அப்போது இவரை அனுப்பிய முகவருக்கு எதிராகத் தாம் வழக்கு நடத்தவுள்ளதாகவும் நட்டஈடு பெற்றுத் தருவதாகவும் காப்புறுதி தருவதாகவும் தம்மிடம் உறுதியளித்ததாக கபிபுல்லா தெரிவிக்கின்றார்.
பல மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு நான் சென்று கேட்ட÷ பாது இவ்வழக்கை தாம் மூடி விட்டதாகத் தெரிவித்தார்கள். இதில் என்ன தீர்ப்பு வந்தது என்று கூடத் தெரியவில்லை என்று கபிபுல்லா தெரிவிக்கின்றார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக உள்ளூர் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கூட முறையிட்டுள்ளேன். ஆயினும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. இவர் நான்கு மாதம் வேலை செய்த சம்பளம், விபத்தில் உயிரிழந்தமைக்கான காப்புறுதி என எந்தவொரு உதவியும் இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு சொல்லொணா துயரங்களுடன் கஷ்டப்படும் குடும்பங்களின் பக்கமும் அரசாங்கம், அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்களின் பார்வை திரும்ப வேண்டும் என அக்கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி நசீரா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: