வியாழன், 31 ஜனவரி, 2013

கவுன்சிலரான பாலியல் தொழிலாளி ! சாதித்த பீகார் பெண்

பர்பூர்: பீகாரில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண், அந்த தொழிலுக்கு, "குட்பை' கூறி விட்டு, தற்போது, அரசியலில் குதித்து, கவுன்சிலராக உருவெடுத்து, சாதித்து காட்டியுள்ளார்.பீகார் மாநிலம், முஜாப்பர்பூரைச் சேர்ந்தவர், ராணி பேகம், 42. இவருக்கு, திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எதிர்பாரதவிதமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நெருக்கடியான நிலை, இவருக்கு ஏற்பட்டது.இந்த தொழிலில், பல்வேறு அவலங்களை, இவர் சந்தித்தார். திடீரென, "இந்த தொழிலை கை கழுவி விட்டு, அரசியல்வாதியாக மாறினால் என்ன' என்ற எண்ணம், இவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன், முஜாப்பர்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


தற்போது, இவர், அரசியல்வாதியாக உருவெடுத்து, மக்கள் பிரதிநிதியாகவும் மாறி விட்டதால், பழைய தொழிலை, அடியோடு விட்டு விட்டார். தன் வார்டில் உள்ள மக்களின், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில், கவனம் செலுத்தி வருகிறார்.பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு, மற்றவர்களை போல், சராசரியான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதிலும், மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.முஜாப்பூர் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டபோதும், ராணி பேகத்துக்கு, வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், இவரது வார்டில் உள்ள மக்களின் தேவைகளை, உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதன் மூலம், அவர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

கருத்துகள் இல்லை: