• அன்னபூர்ணா கோதுமை மாவில் சப்பாத்தி/பூரி சாப்பிடுபவர்களும்
  • புரூ காபி, புரூக் பாண்ட் டீ, லிப்டன் டீ, கிசான் ஜூஸ், நோர் சூப் குடிப்பவர்களும்
  • கிசான் கெச்-அப், ஜாம் தொட்டுக் கொள்பவர்களும்
  • குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் அனுபவிப்பவர்களும்
  • மாடர்ன் பிரெட் வாங்கி உண்பவர்களும்
  • வீல், ரின், சன்லைட், சர்ப், கம்பர்ட் போட்டு துணி துவைப்பவர்களும்
  • விம் போட்டு பாத்திரம் விளக்குபவர்களும்
  • ஹமாம், லைப்பாய், லிரில், லக்ஸ், பியர்ஸ், ரெக்சோனா போட்டு குளிப்பவர்களும்
  • குளோஸ்-அப், பெப்சோடன்ட் பற்பசையில் பல் துலக்குபவர்களும்
  • சன்-சில்க், கிளியர், கிளினிக் பிளஸ் ஷாம்பூ போட்டு குளிப்பவர்களும்
  • பேர் அண்ட் லவ்லி, லக்மே, டோவ் போட்டு அலங்கரித்துக் கொள்பவர்களும்
  • வேசலின், பாண்ட்ஸ், டெனிம் பிராண்ட் பொருட்களை பயன்படுத்துபவர்களும்
ஆங்கில-டச்சு பன்னாட்டு முதலாளிகளுக்கு கட்டும் கப்பம் 100 ரூபாய்க்கு ரூ 1.40லிருந்து ரூ 3.15 ஆக அதிகரிக்க உள்ளது.

இந்தப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்தும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆங்கில-டச்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இந்தியக் கிளையாகும்.
1888ல் ஆங்கிலேய காலனி ஆட்சியின் ஒரு பகுதியாக தனது சன்லைட் சோப்புக் கட்டிகளை லீவர் சகோதரர்கள் இந்தியாவுக்குள் விற்க ஆரம்பித்தனர்.  1933ல் லீவர் பிரதர்ஸ் லிமிடெட் என்ற பங்கு நிறுவனமாக பதிவு செய்து கொண்டனர். இந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனத்துடன் இணைந்து 1956ல் அது இந்துஸ்தான் லீவர் ஆக உருவம் எடுத்தது. 2007ம் ஆண்டு அதன் பெயர் இந்துஸ்தான் யூனிலீவர் என்று மாற்றப்பட்டது.
2011-12ம் ஆண்டில் இந்திய மக்களிடமிருந்து ரூ 22,116 கோடி வருமானம் ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவரில் 52 சதவீத பங்குகளை வைத்திருக்கும் யூனிலீவர்தான் அதைக் கட்டுப்படுத்துகிறது.
லீவர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கான கப்பமாக இந்திய மக்களிடம் வசூலிக்கும் பணத்தில் 1.4 சதவீதத்தை (2011-12ல் மொத்தம் ரூ 309 கோடி) தலைமை நிறுவனத்துக்கு செலுத்தி வந்தது இந்துஸ்தான் யூனிலீவர். இந்த கட்டணத்தை உயர்த்தி 2013-14 நிதியாண்டில் விற்பனை மதிப்பில் 1.9 சதவீதமாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 0.3-0.7 சதவீதம் அதிகமாகவும் வசூலித்து, 2018ம் ஆண்டில் 3.15 சதவீதம் கப்பமாக அனுப்பப் போவதாக இந்துஸ்தான் யூனிலீவர் முடிவு செய்திருக்கிறது.
‘இந்திய நிறுவனங்கள் தமது வெளிநாட்டு எஜமானர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ராயல்டியாக கொடுக்கலாம்’ என்று பிரஸ் நோட் 8 மூலம்  டிசம்பர் 2009ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதித்திருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ 1,196 கோடி வெளிநாட்டு முதலாளிகளுக்கு கப்பம் கட்டிய 20 இந்திய நிறுவனங்கள் இப்போது ஆண்டுக்கு ரூ 3,601 கோடி கப்பம் அனுப்புகின்றன. இனிவரும் ஆண்டுளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
200 ஆண்டுகளாக நேரடி காலனி ஆதிக்கம் மூலம் இந்திய மக்களை சுரண்டிய பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல் 1947க்குப் பிறகு மறைமுகமாக தொடர்கிறது. மன்மோகன் சிங் – ப சிதம்பரம் – மான்டேக் சிங் அலுவாலியா போன்றவர்களின் தொண்டால் அது இன்னமும் தீவிரமடைகிறது.
மேலும் படிக்க