ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கட்காரி பிரசாரத்துக்கு குஜராத் BJP நிர்வாகிகள் எதிர்ப்பு


நிதின் கட்காரி தேர்தல் பிரச்சாரம் செய்வதை குஜராத் மாநில பாரதீய ஜனதா விரும்பவில்லை. அவர் பிரச்சாரம் செய்வது நரேந்திர மோடியின்  வாக்குறுதியை பலமிழக்க செய்து விடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். குஜராத் சட்ட சபைக்கு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் நரேந்திர மோடி, ஒரு மாதத்துக்கு முன்பே, விவேகானந்தர் யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.
வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, இவற்றை முன் வைத்து அவர் மக்களை சந்தித்து வருகிறார்.

பாரதீய ஜனதா சார்பில், குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள பிரமுகர்களின் பட்டியலை தேர்தல் ஆணையரிடம் மாநில நிருவாகிகள் கடந்த வாரம் அளித்தனர். இந்த பட்டியலில் 39 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் பெயராக கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தாற்போல், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பெயர் உள்ளது. இந்நிலையில், நிதின் கட்காரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து கட்காரி விலக வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளது. அவரும் பதவி விலக தயாராக உள்ளார். இதன் மீது கட்சி மேலிடம் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க இருக்கிறது. நிதின் கட்காரி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வாரா, மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், குஜராத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்வதை மாநில நிர்வாகிகள் விரும்பவில்லை. அவர் அங்கு தேர்தல் பிரசாரம் நரேந்திர மோடியின் இமேஜ் வாக்காளர் மத்தியில் பாதிக்கும்.

நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆயுதமாக நிதின் கட்காரியின் விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துக் கொள்ளும். அதற்கு இடம் அளிக்க கூடாது என்று குஜராத் மாநில பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தில் நிதின் கட்காரி இன்று தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொள்வதாக இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளால் மனமுடைந்து காணப்படும் கட்காரி, இமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சார பயணத்தை ரத்து செய்வார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: