செவ்வாய், 30 அக்டோபர், 2012

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது என்ன?

"நீண்ட கால நண்பர்களான சுந்தர்ராஜனும், அருண்பாண்டியனும் விலகிச் சென்றது வருத்தமளிக்கிறது' என, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.சட்டசபை கூட்டத்தொடர், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய நிலையில், அதற்கு முன், காலை, 8 :00 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டு இருந்தார்.
இத்தகவலை அறிந்த, ஏராளமான பத்திரிகையாளர்கள், மீடியா குழுவினர், தே.மு.தி.க., அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்தனர். இந்நிலையில், "கட்சி தலைமையகத்திற்கு வர வேண்டாம்; நேரடியாக சட்டசபைக்கு வந்து விடுங்கள்' என, கடைசி நேரத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் சட்டசபைக்கு சென்றனர்.சட்டசபை கூட்டம் முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள், தனித்தனி கார்களில் வராமல், மூன்று, நான்கு பேராக ஒன்பது கார்களில் பகல், 12:30 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகம் வந்தனர். பகல், 1:00 மணிக்கு எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் துவங்கியது.சேலம் எம்.எல்.ஏ., மோகன்ராஜ், தன் மகள் திருமணம் காரணமாக, நேற்று சட்டசபை நிகழ்ச்சியிலும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.சட்டசபையில் நடந்த விஷயங்கள் குறித்து, முதலில் விவாதம் நடந்தது. பார்த்தசாரதி, நல்லதம்பி எம்.எல்.ஏ.,க்களிடம், சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., சட்டசபையில் இருந்து வெளியேறும்போது, வாங்கி கட்டிக்கொண்ட தகவல் விஜயகாந்திடம் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:தமிழழகன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சென்றதைப் பற்றி, நான் கவலைப்படவில்லை. ஆனால், நீண்ட கால நண்பர்களான சுந்தர்ராஜன், அருண்பாண்டியன் சென்றது தான் வருத்தமாக இருக்கிறது. "ஊமை விழிகள்' படத்தில் நடிக்க, "சான்ஸ்' கேட்க, என் வீட்டிற்கு அலைந்ததை அருண்பாண்டியன் நினைத்து பார்க்கவில்லை.அவருக்காக, பல சினிமா கம்பெனிகளில் நான் பேசி, வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளேன். திரையுலகில் அவருக்கு சரியாக வாய்ப்பு அமையாததால், நல்ல நண்பர் என்பதற்காக, அரசியல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தேன்.இதை, அவர் நினைத்து பார்க்காவிட்டாலும், அவரது குடும்பத்தினர் நினைத்து பார்த்து, கண்டிப்பாக வருத்தம் அடைவர். சுந்தர்ராஜன், தன் தவறை விரைவில் உணர்வார். அதனால், அவரை யாரும் திட்ட வேண்டாம். சட்டசபையில் நமது எம்.எல்.ஏ.,க்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
தன்னை சினிமாவில் தூக்கி விட்ட இப்ராஹீம் ராவுத்தரை கழட்டி விட்டது ஏன் ? இவரின் அநாகரிகத்தை தேர்தலின் போது பார்த்தோம் பின் சட்ட சபையில் கண்டோம் தற்போது விமான நிலையத்தில் எல்லோருடனும் ரசித்தோம். தைரியம் என்றால் என்ன என்று அறியாத கூட்டம் இங்கு ரீங்காரமிடுகிறது

மாட்டிக்கொண்ட மதுரை எம்.எல்.ஏ.,

சட்டசபை கூட்டம் முடிந்ததும், கோபத்தில் உள்ள, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் அவசர அவசரமாக அங்கிருந்து நழுவி சென்று விட்டனர். தமிழழகனும், வேறு வழியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.ஆனால், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, எழும்பூர் எம்.எல்.ஏ., நல்லதம்பி ஆகியோரிடம், சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., மட்டும், தனியாக சிக்கிக் கொண்டார். அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த துரைமுருகன், தன் இருக்கையில் இருந்து வெளியேற முயன்றபோது, எதிரே நின்றிருந்த சுந்தர்ராஜனுக்கு வணக்கம் தெரிவித்தார்.அதை கவனித்த நல்லதம்பி, "இவர் எல்லாம், ஒரு ஆளுன்னு வணக்கம் வச்சி, உங்க தகுதியை நீங்க குறைச்சிக்காதீங்கண்ணே' என்று துரைமுருகனிடம் கூறினார்.துரைமுருகன் நகர்ந்ததும், சுந்தர்ராஜனை சுற்றி வளைத்த பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோர், சென்னை பாஷையில், ஒருமையிலும் திட்டி தீர்த்ததாகக் கூறப்படுகிறது. "என்னை வையாதீங்க' என புலம்பியபடியே, சுந்தர்ராஜன் அங்கிருந்து, "எஸ்கேப்' ஆனார்.

- நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: