சனி, 3 நவம்பர், 2012

விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

நிருபரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், மதுரைக்கு செல்வதற்காக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்டதாகவும், அவர்களை விஜயகாந்த் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாள பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் தரப்பில், தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.குமரேசனும், அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள். வழக்கு விவாதத்தின் முடிவில், 

விஜயகாந்துக்கு நீதிபதி நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஒரு லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதமும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

காவல்துறை விசாரணைக்காக அழைக்கும்போது ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் சாட்சியத்தை விஜயகாந்த் கலைக்கக் கூடாது என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு எம்.எல்.ஏ. (தே.மு.தி.க.) அனகை முருகேசன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கருத்துகள் இல்லை: