வியாழன், 1 நவம்பர், 2012

பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் நடித்த 'தேனி கைனா ரெடி' (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பிராமனர்களை இழிவுப்படுத்தும் காட்சி இடம் பெற்று இருப்பதாக படம் ரிலீசாகி 5 நாட்களுக்கு பிறகு பிராமனர்கள் சங்கம் குற்றம்சாட்டி நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு வந்தனர். திடீரென அவர்கள் கற்களை வீசி ஜன்னல் கதவுகளை உடைத்தனர். மேலும் கதவையும் உடைக்க முயன்றனர்.
இந்த தாக்குதல் நடந்தபோது மோகன்பாபு வீட்டில் இல்லை. டெல்லி சென்று இருந்தார். மகன் விஷ்ணு வெளியே சென்று இருந்தார். வீட்டில் மோகன்பாபு மனைவி மட்டும் இருந்தார். திடீர் தாக்குதலால் பீதி அடைந்த அவர் வீட்டுக்குள் முடங்கி போனார். வீட்டு வாசலில் காவலுக்கு நின்றிருந்த  காவலாளிகளும் செய்வதறியாமல் திகைத்தனர்.
பின்னர் சமாளித்துகொண்டு உருட்டு கட்டையால் தாக்கி மர்ம கும்பலை விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. உருட்டு கட்டை தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் விஷ்ணுவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் தகராறு முடிவுக்கு வந்து விட்டது.
இதுபற்றி விஷ்ணு செய்தியாளர்களிடம், ’’நாங்கள் பிராமனர்களை மிகவும் மதிக்கிறோம். எனது தந்தை 550-க்கும் மேற்பட்ட சினிமா படத்தில் நடித்து உள்ளார். பல படங்களை சொந்தமாக எடுத்து உள்ளார். ஒரு படத்துக்கு பூஜை போடும்போதும், ரிலீஸ் செய்யும்போதும் பிராமனர்களைதான் முதலில் அழைக்கிறோம்.
அப்படிப்பட்ட நாங்கள் அவர்களை அவமானப்படுத்துவோமா? சினிமா கதை என்பது ஒரு கற்பனையே! இதில் மத வெறியை தூண்டக் கூடாது. ஆட்சேபம் இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
அதற்காக தாக்குதல் நடத்துவது சரியல்ல. பிராமனர்களாக இருப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? நானும் ஒரு இந்துதான். வன்முறைக்கு வன்முறையால் பதில் சொல்லவும் எனக்கு தெரியும்’’என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: