திங்கள், 29 அக்டோபர், 2012

இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் தான் பாவம்.

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், நான்கு பேர், முதல்வரை சந்தித்து தொகுதி பிரச்னை தொடர்பாக பேசிய நிலையில், மேலும் சில, எம்.எல்.ஏ.,க்கள், இதேபாணியை பின்பற்றலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அரசியல் வட்டாரத்தில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அளித்த, "மினி' பேட்டி:
அனகை முருகேசன் - செங்கல்பட்டு : வேலையாக இருக்கிறேன். இப்போது என்னால், எதுவும் பேச முடியாது.
நல்லதம்பி - எழும்பூர்: நான்கு எம்.எல்.ஏ.,க்கள் செய்ததை நானும் செய்தால், என் வீட்டில் உள்ளவர்கள், சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவர். அதுபோன்ற சந்தர்ப்பம் வந்தால், நானும் தற்கொலை செய்துக்கொள்வேன்.

பார்த்தசாரதி - விருகம்பாக்கம்: பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் தான், மக்கள் பிரச்னைக்காக என்று கூறி, முதல்வரை சந்தித்துள்ளனர். எங்களது தொகுதி மக்கள் பிரச்னைக்கு, அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்.
சந்திரக்குமார் - ஈரோடு மேற்கு: நான் உட்பட, தே.மு.தி.க.,வில் உள்ள 28 எம்.எல்.ஏ.,க்களும் சென்றால் கூட, கட்சிக்கோ, தலைவருக்கோ சிறிதளவும் சேதாரம் ஏற்படாது. கட்சி மாறும் அரசியல் நீண்ட காலமாக நடந்து வருகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.
சி.எச்.சேகர் - கும்மிடிபூண்டி: தமிழகத்தின் முதல் தொகுதியின் எம்.எல்.ஏ., என்ற அந்தஸ்தை, எனக்கு கொடுத்தவர் விஜயகாந்த். அவரை பின் தொடர்வதில், நான் என்றைக்கும் முதல் ஆளாக இருப்பேன்.
தினகரன் - சூலூர்: கட்சியையும், விஜயகாந்தையும், என்னிடம் இருந்து தனித்தனியாக பிரித்துபார்க்க முடியாது. மனசாட்சி உள்ள மனிதன் யாரும், மற்ற எம்.எல்.ஏ.,க்கள் செய்த தவறை, நினைத்துக்கூட பார்க்கமாட்டான்.
பார்த்திபன் - மேட்டூர்: கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த, சிலரின் தூண்டுதலால், எங்கள் எம்.எல்.ஏ.,க்கள், தவறான முடிவெடுத்துள்ளனர். ஆனால், என்றைக்கும் உண்மைதான் ஜெயிக்கும்.
பாபுமுருகவேல் - ஆரணி: தொகுதி பிரச்னைக்காக, முதல்வரை சந்திக்கவேண்டிய தேவையும், அவசியமும் எனக்கு இல்லை. மற்றவர்கள் என்ன எதிர்பார்ப்புடன் சென்றார்கள் என்று தெரியவில்லை. விஜயகாந்தை பார்த்துதான், எனக்கு ஓட்டுப்போட்டு, மக்கள் எம்.எல்.ஏ., ஆக்கியுள்ளனர்.
சுரேஷ் - செங்கம்: தே.மு.தி.க.,வின், 29 தொகுதியிலும் தான், பிரச்னை இருக்கிறது. தொகுதி பிரச்னை தொடர்பாக, எனது கட்சி தலைவரிடம் மட்டுமே நான் பேசுவேன்.
மனோகர் - சோளிங்கர்: எனக்கு அரசியலில் உயிர் கொடுத்தது விஜயகாந்த். எனது தொகுதி பிரச்னைகளை, போராட்டத்தின் மூலம், அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்வேன்.
சிவக்கொழுந்து - பண்ருட்டி: தொகுதி பிரச்னைக்கு முதல்வரை நேரில் பார்த்தால் மட்டும்தான், தீர்வு கிடைக்கும் என்பதை கேட்டால், சிரிப்புதான் வருகிறது. நான்கு எம்.எல்.ஏ.,க்கள், எதற்கோ ஆசைப்பட்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
மோகன்ராஜ் - சேலம் வடக்கு : குடும்ப திருமண வேலையாக இருப்பதால், அதைப்பற்றி விரிவாக என்னால் பேச முடியாது
சுபா - கெங்கவல்லி: மற்றவர்கள் முதல்வரை சந்திக்க சென்றதைப் பற்றியெல்லாம், என்னிடம் கேட்காதீர்கள். நானும், எனது கணவரும், 20 வருடமாக கேப்டனுடன் இருக்கிறோம்.
சாந்தி - சேந்தமங்கலம்: தொகுதி பிரச்னைகளை சட்டசபையிலும், கலெக்டரிடமும் பேசி தீர்த்துக்கொள்வேன்.
சம்பத்குமார் - திருச்செங்கோடு: அரசியலில் முகவரி கொடுத்தவர்களை மறந்து செல்பவர்களை, துரோகி என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வரை சந்திக்க வருமாறு, என்னை யாரும் தொடர்புக்கொள்ளவில்லை.
இவர்கள் தவிர, தே.மு.தி.க.,வில் முக்கியமான எம்.எல்.ஏ.,க்களான பண்ருட்டி ராமச்சந்திரன், பாண்டியராஜன் மட்டுமின்றி, மேலும் சில எம்.எல்.ஏ.,க்களை, மொபைல்போன் மூலம் தொடர்புக்கொள்ள முயற்சித்தபோது, அவர்களை தொடர்புக்கொள்ள முடியவில்லை.
சில எம்.எல்.ஏ.,க்கள், தொடர்பில் வந்து, "பிறகு பேசுவதாக' தொடர்பை துண்டித்துவிட்டனர். சில எம்.எல்.ஏ.,க்கள், தங்களது உதவியாளர்கள், கார் டிரைவர்களை பேச வைத்து, "பிசி'யாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால், இவர்களது கருத்துக்களை கண்டறிய முடியவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: