சனி, 3 நவம்பர், 2012

விஜயகாந்தை கேட்டது போல் ஜெயலலிதாவை கேட்டால்???//

முட்டைக்கு மொட்டை அடிப்பதுபத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறதா
சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?
குறிப்பிட்ட பத்திரிகையாளர் (அவர் தற்போதைய அரசு ஆதரவு பத்திரிகையாளர் என்பதில் சந்தேகம் வேண்டாம்) விஜயகாந்திடம் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வரை சந்தித்ததைப் பற்றி கருத்து கேட்கிறார். விஜயகாந்துக்கு விடையளிக்க விருப்பமில்லை. பதிலுக்கு ஊரெல்லாம் கரெண்டு இல்லை. இதைப்பத்தி போயி ஜெயலலிதாகிட்டே என்னன்னு கேளு என்று பதில் அளித்திருக்கிறார். புத்திசாலித்தமான பத்திரிகையாளர் பதிலுக்கு ‘ரிஷிவந்தியத்தில் மட்டும் கரெண்டு இருக்கா?’ என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார். கோபத்துக்கு பேர் போன விஜயகாந்துக்கு கோபம் வந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ரிஷிவந்தியம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? ரிஷிவந்தியத்துக்கும் ஜெயலலிதாதான் முதல்வர். இந்த ஆட்சியின் மின்சார வாரியம்தான் அந்த ஊருக்கும் மின்சாரம் கொடுக்க வேண்டும்.
இதையடுத்துதான் ரசபாசம் ஆகியிருக்கிறது. குறிப்பிட்ட பத்திரிகையாளரை விஜயகாந்த் ஏகவசனத்தில் ‘நாயே’ என்று விளித்திருக்கிறார். உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் கொடுக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நூதனப் போராட்டம் ஒன்றினை அறிவித்திருக்கிறார்கள். அனைவரும் வருக, ஆதரவு தருகவென்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆட்சிக்கு வந்தபோது வாராவாரம் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்களும், உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், அதிகாரிகளும் கூட பத்திரிகைகளிடம் எதைப்பற்றியும் பேச விரும்புவதில்லை. எதிர்தரப்பினரின் கருத்துகளை வாங்கிவிட்டு, அரசு தரப்பாக பத்திரிகைகளே பேசித்தொலைக்க வேண்டிய அபாக்கியமான நிலைமை.

அப்படியும் ஏதோ இலைமறை காய்மறையாக எழுதினாலும் முதல்வரோ, அமைச்சர்களோ பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகளை அம்புமாதிரி தொடர்ச்சியாக எய்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிகாரத்துக்கு எதிராக விமர்சனம் வைக்கும் காமன்மேன்கள் மீதும் இப்போது வழக்குகள் பாய ஆரம்பித்திருக்கிறது.
இப்படியிருக்கும் பிரகாசமான தமிழக பத்திரிகைச் சுதந்திரச் சூழலில் விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அவசியம்தான். நமது உரிமையை நிலைநாட்ட இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி. நம்மை சீண்டினால் என்னாகும் என்பதை உலகம் உணரவேண்டாமா. குறைந்தபட்சம் பத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதையாவது மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா. நான்கூட பேசாமல் கையில் ‘ரெட்டை எலை’ பச்சை குத்திக்கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். ஐம்பது வயதுக்கு பிறகு ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: