செவ்வாய், 30 அக்டோபர், 2012

6 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடும்ப தகராறு காரணமாக 6 பெண் குழந்தைகளுக்கு இட்லியில் விஷம் கலந்து கொடுத்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(40) விவசாய கூலித் தொழிலாளர். இவரது மனைவி கீதா(37). இவர்களுக்கு ஹேமலதா(18), பிரேமலதா(15), புஷ்பலதா(13), கடல்நிலவு(10), ஆதீஸ்வரி(7), ஆகாயதாமரை(3), நட்சத்திரதேவி (2) என்று 7 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான ஹேமலதா திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். ஆயுத பூஜை விடுமுறைக்காக ஹேமலதா சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி சேகருக்கும், கீதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் குடும்பத்தில் அனைவரும் சோகமாக காணப்பட்டனர். நேற்று லீவு முடிந்ததால், ஹேமலதா கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தந்தை சேகரும் சென்றார்.

மற்ற குழந்தைகளுடன் வீட்டில் இருந்த கீதா, காலை உணவாக உட்கொள்ள இட்லி அவித்தார். அதன்பிறகு குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாய் கீதா மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து ஆகாய தாமரையை தவிர மற்ற 5 குழந்தைகளும் மயங்கி விழுந்தனர்.
அதை கண்டு பயந்த ஆகாய தாமரை, அதே பகுதியில் வசித்து வரும் தனது தாய் மாமா வெங்கடேசனிடம் சென்று தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த வெங்கடேசன், வீட்டில் மயங்கி கிடந்த அனைவரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, மயங்கி விழுந்த அனைவரும் விஷம் சாப்பி்ட்டு இருப்பது தெரியவந்தது. இதில் சிகிச்சை பலனின்றி கீதா நேற்று இறந்தார். விஷம் சாப்பிட்ட மற்ற 5 குழந்தைகளுக்கு, டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: