புதன், 23 மே, 2012

Vasanthi Devi:ரேங்க்' வாங்காதவர் எல்லாம் சோடை போனவர் அல்ல

மாநில அளவில், "ரேங்க்' வாங்காத மாணவர்கள் எல்லாம், சோடை போனவர்கள் கிடையாது. வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்களையும், பள்ளிகளையும் எடைபோட முடியாது என, கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி கூறினார். 
 கவலைவேண்டாம். அரசியல்துறை உண்டு. அள்ளலாம்.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், முதல் இடத்தில் ஒரு மாணவர், இரண்டாம் இடத்தில் மூவர், மூன்றாம் இடத்தில் இருவர் என, ஆறு மாணவர்கள், மாநில அளவில், "ரேங்க்' பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே, தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்; அதுவும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்தவர்கள்.தலைநகர் சென்னை உட்பட, 31 மாவட்டங்களில் இருந்து, ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பெறவில்லை. இது, தனியார் பள்ளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்து சர்ச்சையை எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது.


எடைபோடாதீர்:இது குறித்து, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறியதாவது: வெறும் மதிப்பெண்களை வைத்து, பள்ளிகளையும், மாணவர்களையும் எடைபோட முடியாது. "ரேங்க்' எடுக்காத மாணவர்கள் எல்லாம், சோடை போனவர்கள் கிடையாது.அரசுப் பள்ளிகளில், அடித்தட்டு மற்றும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் சேர்கின்றனர். ஒரு சவாலான நிலையை எதிர்கொண்டு, அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள், பின் தங்கியவர்கள் என்ற கருத்தை ஏற்க மாட்டேன்.இவ்வாறு வசந்திதேவி கூறினார்.

பிரச்னை:தனியார் பள்ளிகளில், மனப்பாடம் செய்து, முக்கியப் பாடங்களில், 200க்கு 200 மதிப்பெண் பெற்று, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். இப்படி சேருபவர்கள், உயர்கல்வி படிப்புகளை சரியாக படிக்க முடியாமல், "அரியர்ஸ்' வைப்பதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலை)யின் முதல்வர் சேகர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்கின்றனர் என, கூற முடியாது. அவர்களிலும், சிலர் சரியாக படிக்காதவர்களாக, செமஸ்டர் தேர்வில் முழுவதும் தேறாமல், "அரியர்ஸ்' வைப்பவர்களாக இருக்கின்றனர்.அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளில் இருந்து வந்துசேரும் மாணவர் அனைவரும், திறமையானவர் இல்லை என்றும் கூற முடியாது. மேற்கல்வி பயிலும் போது மாணவ, மாணவியருக்கு ஏதாவது பிரச்னை எழும்போது, அதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.இவ்வாறு சேகர் கூறினார்.

கருத்துகள் இல்லை: