சனி, 26 மே, 2012

BJP தலைவர்கள் உச்சகட்ட கருத்து வேறுபாடு

மும்பை :பா.ஜ.,வில், தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மும்பையில், நேற்று நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் அத்வானியும், சுஷ்மா சுவராஜும் பங்கேற்கவில்லை.
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் மும்பையில் துவங்கியது. சமீப காலமாக, கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கட்சி சார்பில், தேசிய அளவில் நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணித்து வந்தார்.
கடந்தாண்டு, டில்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். தன் பரம விரோதியான சஞ்சய் ஜோஷியை, நிதின் கட்காரி தான் செயற்குழுவில் சேர்த்துள்ளார் என, மோடி கருதியதே இதற்கு காரணம்
.
மோடி பங்கேற்பு:இந்நிலையில், மும்பையில் நடக்கும் செயற்குழு கூட்டத்திலாவது, மோடியை பங்கேற்க வைக்க வேண்டும் என, நிதின் கட்காரி முயற்சி மேற்கொண்டார்.இதையடுத்து, திடீர் திருப்பமாக, சஞ்சய் ஜோஷி, தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி, தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கர்நாடக முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பாவும், திடீரென, கட்காரி அழைப்பை ஏற்று, செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதனால், பா.ஜ.,வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல், தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டதாக, தகவல் வெளியானது. ஆனால், ஒரே நாளில் இந்த விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

புறக்கணிப்பு:கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானியும், சுஷ்மா சுவராஜும், செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, நேற்று மாலை நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது, பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பாவை, செயற்குழு கூட்டத்துக்கு அழைத்தது, அத்வானிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு, மீண்டும் முக்கியத்துவம் கொடுப்பதால், மக்களிடையே கட்சியின் நற்பெயர் பாதிக்கப்படும் என கருதினார். மேலும், ஆர்.எஸ்.எஸ்., நெருக்கடியால், கட்சியின் விதிகளை திருத்தி, கட்காரியை இரண்டாவது முறையாக தலைவராக தேர்வு செய்ததும், அத்வானிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, அவர், செயற்குழு கூட்டத்தின் இறுதியாக நடந்த பொதுக் கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

கட்சி சார்பில், தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், தவறாமல் பங்கேற்பவர் அத்வானி.முதல் முறையாக, தற்போது தான், இதுபோன்ற முக்கியமான கூட்டத்தை, பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். அதேபோல், சுஷ்மாவுக்கும், கட்காரியுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால் தான், அவரும் இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

மேலும், நரேந்திர மோடியை, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் பரிந்துரைப்பதும், அத்வானிக்கும், சுஷ்மாவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் இந்த தகவல்களை மறுக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், "அத்வானியும், சுஷ்மாவும், ஏற்கனவே சில நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறுதி அளித்து விட்டனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, பொதுக் கூட்டத்தில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை' என்றனர்.

சுஷ்மா மறுப்பு:இதுகுறித்து, சுஷ்மா கூறுகையில், ""உ.பி.,யில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதி அளித்து விட்டேன். இந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது. இதன் காரணமாகவே, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.இதை வைத்து, எந்த சர்ச்சைக்குரிய பிரச்னையையும் எழுப்ப வேண்டாம். மற்றபடி, செயற்குழுவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுகிறேன்,'' என்றார்.

தீர்மானம்:பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், நேற்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, இந்த தீர்மானங்களை கொண்டு வந்தார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பா.ஜ., மீது, நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இந்தியாவின் நலனை மீட்டுத் தரும் கட்சியாக, பா.ஜ.,வை மக்கள் நினைக்கின்றனர்.இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நாம் செயல்பட வேண்டும். மாநில கட்சிகளை, தே.ஜ., கூட்டணியில் சேர்த்து, கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டாட்சி முறைக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. இதை தடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: