புதன், 23 மே, 2012

திமுகவுக்குத் துரோகம் புரிந்தால்?திடீர் அறிவிப்பு

சென்னை: திமுகவுக்குத் துரோகம் புரிபவர்கள், புரிந்தவர்கள், தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையிட்டவர்கள் எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவர் என்று திமுக தலைவர் கருணாநிதி திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த எச்சரிக்கை கலந்து வந்துள்ளது. இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பேராசிரியர் 90-வது வயதையும், நான் 89-வது வயதையும் அடைந்திருக்கிறோம் என்றால்; நாங்கள் இந்த வாழ்க்கையில் இன்பத்தை துய்த்தோம் இல்லை; இல்லற சுகத்தைப் பெரிதென எண்ணிக் கிடந்தோமில்லை.

அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித்தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்து தெளிவுபெற வேண்டும்.

தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும்! ஒற்றுமை உரமாகட்டும்! என்றுரைக்கின்றேன்.

தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம்! நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய "கல்லணை'' போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது. இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் நமது அமைப்புக்களில் ஏற்படும் கீறல்களையும், பிளவுகளையும் போக்குவதற்கு வழி காண நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழகத்தின் தளகர்த்தர்களும் அமர்ந்து பேசி மாவட்டந்தோறும் தி.மு.க.வில் கட்டிக் காக்கப்படும் ஒற்றுமை, சுட்டிக்காட்டப்படும் வேற்றுமை இவற்றையெல்லாம் கணக்கிட்டு - இவற்றுக்கோர் இறுதி முடிவு காணக் குழு ஒன்றினை; தலைமைக் கழகச் சார்பில் நியமித்தோம்.

அந்தக் குழுவினர் நாம் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து, ஒரு தரப்பு புகார்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரு தரப்பு நியாயங்களையும் எடுத்து விளக்கிடும் அறிக்கை ஒன்றை தலைமைக்கு தந்துள்ளார்கள். அந்த அறிக்கைத் தொகுப்பைக் காணும் நேரத்தில் அண்ணா பெயரால் வெளியிடப்பட்டிருந்த நூல் ஒன்று எனக்குக் கிட்டியது. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்று மதுரை மாநில மாநாட்டையொட்டி, அண்ணா எழுதிய அருமையான எழுத்தோவியம் அது. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்று அண்ணா சொல்லிய அந்த வாசகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு குழுவினர் கொண்டு வந்து தந்த அறிக்கைத் தொகுப்பை நானும் பேராசிரியரும் பார்வையிட்டோம்.

கட்டுப்பாடு மீறியோர் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தோரும்; அவர்களின் பெயர்கள் அறிக்கையிலே இடம் பெற்றிருப்பதை அறிந்து, தெரிந்து, தாம் இழைத்தது குற்றம்தான் எனத் தெளிந்து; என்னையும், பேராசிரியரையும் மற்றும் தலைமைக் கழகத்தினரையும் தொடர்பு கொண்டு "பிழை பொறுத்தருள்க'' என்றும் கேட்கிறார்கள்.

"இனி பிழை நேராது'' என்ற உறுதியும் அளிக்கிறார்கள். பிழை புரிந்தோர் யாரென்ற பட்டியலையும் பார்க்கின்றோம். இனி அப்பிழை நேராது என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு தொடர்ந்து நமது கொடியின் கீழ் நின்று; தொண்டு புரிய துடிப்பவர்களையும் காணுகின்றோம். இவர்களில் யார் பிழை புரிந்தோர் - யார் மீது வீண்பழி என்பதை ஆராய்ந்து அளவிட்டுத் தீர்ப்புச் சொல்ல நிலைமையும் இடம் தராது; நேரமும் போதாது!

லட்சக்கணக்கில் உறுப்பினராய் இருப்போரில் புகார்களுக்கு ஆட்பட்டோர் தொகை; அப்படி ஒன்றும் அளவிடற்கரியதல்ல! விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளதுதான்.

கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன பெரியாரின் நிழலில் வளர்ந்த நாம் "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்ற அண்ணாவின் பொன்மொழியையும் தள்ளி விடுவதற்கில்லை. புகாருக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை என்கிறபோது; அந்தப் புகார்களைக் கொடுத்தவர்கள் மீதும் புகார் இருப்பதை நாங்கள் அறியாமல் இல்லை.

இதற்குத் தீர்வு என்ன? "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'' என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நமக்குத் தற்காலிகத் தீர்வு! அப்படியென்றால் தி.மு.க.வுக்கு துரோகம் புரிந்தோர், கழகத்தின் வெற்றிக்கு முட்டுக் கட்டையிட்டோர் - தலைமைக் கழகத்தின் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்களா; எனக்கேட்கலாம்!

தண்டனையைவிட மேலான கண்டனத்திற்கு உள்ளாவார்கள் என்பதும், எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என்பதும் நான் அளிக்கும் உறுதியான வாக்குறுதியென தம்பிமார்கள் நம்பிடுவார்களாக!

தவறிழைத்தோரைப் புரிந்து கொண்டோம் என்பதும்; கழகத்திற்குத் துரோகம் இழைத்தோர் திருந்தக்கூடும் என்ற நம்பிக்கையும் தான் - இதற்கு மேலும் இந்த இனமான இயக்கத்திற்கு எள்ளளவு இழிவு தேடிட எண்ணுவோர் எவராயினும் "மறப்போம் மன்னிப்போம்'' என்றில்லாமல், கழகத்தை இழிமொழிக்கு உள்ளாக்காமல், இறுதிவரை கட்டுப்பாடு காப்போம் என்ற உறுதியை எனது பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நானும் பெறுகிறேன். நீங்களும் பெற்றிடுவீர் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: