வெள்ளி, 25 மே, 2012

சாதிக்கேற்ற டம்ளர் இன்னும் மதுரையில்

மதுரைப் பக்கத்தில் சில கிராமங்களில் இன்னமும் நடைமுறையில் உள்ள இரட்டை டம்ளர் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை. உசிலம்பட்டி பகுதியிலுள்ள மடைப்பட்டி கிராமத்தில், டீக்கடை ஒன்று காவல்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த டீக்கடையில் வெளிப்படையாக இரட்டை டம்ளர் முறை அமலில் இருந்தது என்பதே குற்றச்சாட்டு.
கல்லுசாமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டீக்கடை உரிமையாளர் என்.ராஜா என்பவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித் இன மக்களுக்கு எதிரான சமூக வேறுபடுத்தல் நடைமுறை என்ற விதத்தில், இரட்டை டம்ளர் முறை சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
நீண்ட காலத்துக்கு முன் கிராமப் பகுதிகளில் அமலில் இருந்த இரட்டை டம்ளர் முறை, தற்போதும் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற உண்மை, இந்த வழக்குப் பதிவில் இருந்து தெரியவந்துள்ளது.
டீக்கடை உரிமையாளர் ராஜா, குறிப்பிட்ட சில ஜாதியினருக்கு எவர்சில்வர், மற்றும் கிளாஸ் டம்ளர்களிலும், வேறு சில ஜாதியினருக்கு டிஸ்போஸபிள் பேப்பர் கப்களிலும் டீ வழங்கினார் என்கிறது போலீஸ்.
மடைப்பட்டி கிராமத்துக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் விஷயத்திலும் இதே பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வருபவர், கிராமத்தில் யாருடைய வீட்டுக்கு வந்துள்ளார் என்பதை வைத்தே அவருக்கு எந்த டம்ளரில் டீ வழங்குவது என்று ராஜா தீர்மானித்தார் என்று போலீஸ் ரிக்காட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் மடைப்பட்டி கிராமத்தில், 90 குடும்பங்களுக்கு டம்ளரில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: