சனி, 13 நவம்பர், 2010

Myanmar(Burma)15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் தேசிய ஜனநாயக லீக் தலைவி ஆங்சான் சூகி இன்று விடுதலை!


15 ஆண்டு காலம் வீட்டுக் காவலில் இருந்துள்ள ஆங்சான் சூகியின் விடுதலை உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் கையெழுத்திட்டனர். இதையடுத்து, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மியான்மர் நாட்டில் கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது.

ஆனால், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், தேசிய ஜனநாயக லீக் தலைவி ஆங்சான் சூகியை வீட்டுக் காவலில் வைத்தது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருதடவை வீட்டுக் காவலை நீட்டித்து வந்த போதும் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அவரது வீட்டுக் காவல், கடந்த ஆண்டு முடிவடைந்தது. ஆனால், சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் ஒருவரை, தனது வீட்டுக்குள் அனுமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆங்சான் சூகிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த காவல், இன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், ஆங்சான் சூகியை விடுதலை செய்வதற்கான உத்தரவில் ராணுவ ஜெனரல்கள் நேற்று கையெழுத்திட்டனர். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஆங்சான் சூகியின் வீட்டுக்கு வெளியே பொலிசாரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் இன்று விடுதலை செய்யப்பட்டது உறுதியானது.
ஆங்சான் சூகி விடுதலை செய்தியால், அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். யங்கூனில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டால், அந்த விடுதலையை ஆங்சான் சூகி ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
65 வயதான ஆங்சான் சூகி, கடந்த 21 ஆண்டுகளில், 15 ஆண்டுகளை வீட்டுக் காவல் தண்டனையிலேயே கழித்துள்ளார். அவரை விடுவிக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தியும், ராணுவ அரசு இதுவரை செவிசாய்க்காமலே இருந்து வந்தது. ஆங்சான் சூகி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஆங்சான் சூகியின் கட்சி பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில், ராணுவ ஆதரவு கட்சி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், ஆங்சான் சூகி இன்று விடுதலை பெற்றார்.

கருத்துகள் இல்லை: